Pages

Sunday, September 02, 2012

அய்யா! வணக்கம்


"அய்யா!  வணக்கம் "  என்றேன்.
அவர் என்னை தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. தன் கருமமே கண்ணாயினார் என்னும் வகையிலே கணினியிலே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

"அய்யா வணக்கம் " என்று மீண்டும் உரத்த குரலில் சொன்னேன்.
தலை நிமிர்ந்தார். எனைப் பார்த்தார்
என்னய்யா ?
பெரிய அய்யாவை பார்க்கணும் என்றேன்.
இப்ப பார்க்க முடியாது. என்றார்
நான் பார்க்கணுமே என்றேன்.
நான்தான் இப்ப பார்க்க முடியாதுன்னு சொல்றேனுல்ல

சுற்றி ஒருமுறை பார்த்தேன் பெரிய அறை தான். வரவேற்கும் பி.ஏ .அறையே இவ்வளவு பெரியதாக இருந்தால் உள்ளே இருப்பவர் அறை இன்னமும் பெரியதாக இருக்கும் என்று என் உள் உணர்வு உரைத்தது.

பெரிய அய்யாவைப் பார்க்க வருபவர்களுக்காக என நாற்காலிகள் பல அழகழாக வரிசையாக இருந்தன  .  அதில் அமர்ந்தாலே அந்தஸ்து உயர்வதைப் போல இருந்தது.  ஒரு ஐந்தாறு வரிசைகள் அதில் கடைசி வரிசையில் அமர்ந்தேன்

அந்த பி. ஏ , ஐயா என்னைப் பார்த்தார் என்ன நினைத்தாரோ திரும்பவும் தன் கணினியில் சங்கமம் ஆனார்

சுற்றி இருக்கும் சுவர்களில் அடடா !! என்ன ஒரு மேற்கோள்கள். !!

                                   கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
                                  குரிமை உடைத்திவ் வுலகு.

வள்ளுவனின் படத்தின் கீழே இந்த குரளைப் பார்த்ததும், சரிதான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்று தோன்றியது.

எதிர்ச்சுவரில் அந்த பி. ஏ . இருக்கை மேலே அண்ணல் காந்தி புன்னகைத்து கொண்டிருந்தார்
அவர் சொல்லியதாகச் சொல்லப்படும் சொற்கள் பெரிய எழுத்துக்களில் பிரகாசித்துக் கொண்டு இருந்தன .



"A customer is the most important visitor on our premises. He is not dependent on us; we are dependent on him.He is not an interruption in our work; he is the purpose of it. He is not an outsider in our business; he is a part of it.We are not doing him a favour by serving him; he is doing us a favour
by giving us an opportunity to do so. "

ஆஹா !!  நமது பாக்கியமே நாம் இந்த இடத்துக்கு வந்தது. கண்டிப்பாக நான் நினைத்து வந்த காரியம் முடியும் சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. நாம் வந்த காரியம் முடியவேண்டும் என நினைத்துக்  கொண்டேன் 

அப்போது அந்த திடீர் என்று அந்த பி.ஏ . அய்யா தலை நிமிர்ந்தார்

பெரிய அய்யாவை பார்க்க முடியாது என்று சொன்னேன் இல்லையா ? போயிட்டு வாங்க .!!
என்றார் .
நானோ விடாப்பிடியாக ,
"ஐயா,  நான் அவரைக் கண்டிப்பா பார்க்க வேண்டும்".என்றேன்.

பார்க்க முடியாது அப்படின்னு நான் சொன்னா  சொன்னது தான். என்று அழுத்திச் சொன்னார்  போடா வெளிலே என்று தள்ளாத குறைதான்

அந்த சமயம் என்று பார்த்து ஒரு பத்து பேர் தப தப என்று இரைச்சலாக உள்ளே வந்தனர்

நாங்க வந்திருக்கோம் என்று சொல்லுங்க என்று சொல்லவில்லை. ஆணை இட்டார்போல் இருந்தது

பெரியவரு இன்னைக்கு யாரையும் பார்க்க மாட்டேன் என்று சொல்லியிருக்காரு அது தான் என்று தயங்கி தயங்கி சொன்னார் பி. ஏ .

அதெல்லாம் அப்புறம். இப்ப பாத்தாகணும். ஒன்னு ரண்டு இல்லை அப்படின்னு தெரிஞ்சாகனும். என்றார் அதில் வந்திருந்த ஒரு மீசைக்காரர்

ஆமாம்.  ஆமாம். என்றார்கள். மற்றவர்கள்.

கொஞ்சம் இருங்க. அப்படி சொல்லிவிட்டு உள்ளே போனார் பி.ஏ .  அடுத்த நிமிடம் வெளியே வந்தவர், " உங்களை நாளைக்கு காலை வரச் சொல்கிறார் "

" இப்ப என்னவாம்?"

" அர்ஜெண்டா போன் பேசிக்கிட்டு இருக்காரு.. கான்பிரன்ன்ஸ் விஷயம் போல இருக்குங்க .."

அவர்களுக்கேலேயே முணு முணுத்துக் கொண்ட பின்,
" சரி சரி. நாளைக்கு வரோம். "  என்றவர்கள், திரும்பினாற்போல் இருந்தது.
திடீர் என்று ஒருவர் மட்டும் இவர் நாளைக்கு இருப்பாரா என்று கேட்டார்.

இருப்பார்னு தான் நினைக்கிறேன் என்றார் பி.ஏ .
அனிச்சையாக கைகளை மேலே தூக்கிக் காண்பித்தார்

வந்த அதே வேகத்தில்  திரும்பிச் சென்றது அந்த குழாம் .

அந்த பி. ஏ . என்னைப் பார்த்தார்  உங்க கிட்ட எத்தன தர சொல்லுவது ?  நீங்க போங்க !
அவங்கள பாக்க முடியாது. என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. என்றார்.

சார் என்று இழுத்தேன்.

சார் மோர் எல்லாம் வேண்டாம் முதல்லே போய்ச்சேருங்க  ...ஏகப்பட்ட வேலை இருக்குது என்றார் அப்ப பார்த்து, அந்த கம்பயூடர் சத்தம் கொஞ்சம் அதிகப்படியாகவே கேட்டது. அது ஒரு பாட்டு.கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்தேன் 

 ( நீங்களும்  கண்டிப்பா கேட்கனும்னா இங்க க்ளிக் பண்ணுங்க.)

அந்த சமயம் பார்த்து தொலை பேசி சத்தம் போட்டது. பி.எ. ஸ்மார்ட் ஆனார். கம்புடர் ஸ்பீக்கரை ஆப செய்தார்

அதை எடுத்தவர் " எஸ்.மேடம். எஸ்.மேடம்." என்று பத்து மேடம் போட்டார்  " ஒரு நிமிஷம் , நீங்க பேசணுமா கனெக்ஷன் கொடுக்கட்டுமா, ....................வேண்டாமா........நான் சொன்னால் போதுமா ...  சரி மேடம் " என்று போனை வைத்தார். பக்கத்தில் இருந்த அடுத்த போனை ( அது இன்டர் காமாக இருக்கும் போல் இருந்தது. ) முதலில் பேசற பக்கத்தை காது பக்கம் வைத்துகொண்டார் பிறகு மாற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார்

" சார் ! வீட்டிலேந்து  மேடம் பேசினாங்க சார். அவங்க அம்மா வந்திருக்காங்களாம். உடனே வரச்சொன்னாங்க ... ........எஸ் சார், ....ஆமாம் சார்..." என்று போனை வைத்தார்.

திடீர் என நினைவுக்கு வந்தது போல, திரும்பவும் போனை எடுத்தார்.

 " சார், சாரி டு டிஸ்டர்ப் யு ஒன்ஸ் எகைன் சார், வரும்போது,  கிராண்ட் ஸ்வீட்ஸ் லே ரண்டு ஸ்வீட்ஸ் ரண்டு காரம் வாங்கிண்டு வரச்சொன்னாங்க சார். என்றார்.

உஸ் என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு அப்பாடி, இன்னி வேலை முடிஞ்சு போச்சு. என்றார்.

இடை வேளைக்கப்பறமாவது சரியா பார்க்கணும். என்று முனு முணுத்தார்

என்ன பார்க்கணும் சார். ! என்று இடை மறித்தேன். என் இடைச் செருகலை அவர் விரும்பவில்லை என்று நன்றாகவே தெரிந்தது. வேண்டா வெறுப்பா என்னை பார்த்தார்

அதே நிமிஷம் உள்ளிருந்து அந்த பெரியவர் வெளியே  வந்தார் . வந்த உடனே அவர் கண்கள் பி.ஏ வை மட்டுமே சந்தித்தன என்று நான் கவனித்தேன்.

" வேற எதுனாச்சும் சொன்னாங்களா ? "  என்றார்.

" இல்லை சார், உங்களை சீக்கிரம் வரச் சொன்னாங்க அது தான் " என்றார் பி. எ.

" சரி, நான் கிளம்பறேன். " என்று கிளம்பியவர் , " குமார் !  மேலேந்து எதுனாச்சும் போன் வந்தது அப்படின்னா, நான் டூர் லே இருக்கேன் , அப்படி சொல்லிடுங்க " என்றார்.

 வெளியே போக திரும்பியவர் என்னைப் பார்த்தார்.  திடுக்கிட்டார் என்று சொன்னால் மிகை ஆகாது.

"வாங்க ..வாங்க...நீங்க நாளைக்குத்தானே  வருவீங்க அப்படின்னு எதிர்பார்த்தோம் ?
குமார் ! இவர் தான் எனது சக்ஸசர் .  என் ப்லேசிலே . ஆமா, இவர் வந்திருக்கார்னு ஏன் சொல்ல வில்லை? சச் அன் இம்பார்டன்ட் பர்சன் "

அந்த பி. எ.  குமார் ( அவரது பெயர் ) முகம் வெளிறிப்போனது நன்றாகவே தெரிந்தது.

" நோ ப்ராப்ளம் .. நான் தான் ஒரு நாள் முன்னாடியே வந்துவிட்டேன். என்னென்ன எப்படி எப்படி செய்யணும் அப்படின்னு உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண வந்தேன். "

" தட்ஸ் ஒ.கே. வாங்க.. முக்கியமா ஒரு வேலை. ஹி ..ஹி ...போய்க்கொண்டே பேசலாமே !!"

"வேண்டாம். நாளைக்கே வரேன். "

" என்னென்ன செய்யணும் அப்படின்னு தெரிஞ்சகண்ணும் அப்படின்னு  சொன்னீர்களே? "

" ஆமாம். ஆனா , இப்ப என்ன என்ன செய்யக்கூடாது அப்படின்னு தெரிஞ்சுகிட்டேன் அது போதும். "

" ஹி ..ஹி .....    ..  .ஒ.கே. ...   திப்ருகார் எப்படி சார் ? "

 அவருக்கு அங்கே தான் தமிழ் நாட்டிலேந்து மாற்றலாகி இருந்தது.




வருகை தந்த வரும் வர என்னும் எல்லோருக்கும் எனது உளமாற நன்றி.
















6 comments:

  1. குமார் அவர்களுக்கு (கொலைவெறி பாட்டு உட்பட) எல்லாமே மறந்து போயிருக்கும்...

    /// இப்ப என்ன என்ன செய்யக்கூடாது அப்படின்னு தெரிஞ்சுகிட்டேன் ///

    அசத்தல்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. சில நிறுவனங்களில் நடக்கும் நடக்கின்ற ஒன்று

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. பி.ஏ. டெரர் ஆகியிருப்பார்.... :)

    ReplyDelete
  4. பெரிய செய்தியை எளிதாகச் சொல்லி விட்டீர்கள்! அருமை தாத்தா!

    ReplyDelete
  5. ஆங்கிலேயர்கள் அலுவலக உதவிக்காக உதவியாளர்கள் பதவியை உண்டாக்கி வைத்துவிட்டு போய்விட்டார்கள். நம்மவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அந்த பதவியை வைத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி