Pages

Monday, May 25, 2009

நடப்பதெல்லாம் நடந்தே தீரும்.




எதையுமே நீ செய்ய வில்லை. நடப்பதெல்லாம் நடந்தே தீரும்.
நடப்பதற்கெல்லாம் நீ ஒரு சாட்சி தான்.
நீ வருத்தப்பட்டோ அல்லது கோபப்பட்டோ என்ன ஆகப்போகிறது !
ஆக, நீ உன் கடமையைச் செய்.

பாரதப்போரில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன உபதேசத்தின் உட்கருத்து இதுவே.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்துவிட்டால்....?

என அன்று பாடினார் நம் தமிழ் மண்ணின் இணையற்ற கவியரசன் கண்ணதாசன்.

அவன் இன்று இருந்தால் என்ன பாடி இருப்பார் ?

இருக்கட்டும். அது அது அவரவர் தலைவிதி என விட்டுவிடவா ?? !!

என்றோ நடந்த நிகழ்ச்சி ஒன்று ஏனோ நினைவுக்கு வருகிறது.

பல ஆண்டுகட்குமுன் (1970ம் வருடங்களில் இருக்கலாம் !) நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றும் நினைவில் இருக்கிறது.

எனது நண்பர் எனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், அவர் திடீரென் இறந்து போனார்.
முற்றிலும் எதிர்பாராத இறப்பு. அவரது மனைவி (30) இரு பெண் குழந்தைகள் ( 5, 2 )
அல்றிக்கொண்டிருந்த காட்சி அங்கு வந்திருந்த நண்பர்கள் கண்களைக் குளமாக்கியது.

அக்குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ன நடக்க இருக்கிறது என ப்புரியவில்லை. புரிந்துகொள்ளும் வயதும் அவர்களுக்கு இல்லை. குழந்தைகள் வீரிட்டு அழுதுகொண்டிருந்தன. அவர்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க வேண்டும். சின்னக்க்குழந்தைக்கு யாரேனும் பால் தரவேண்டுமே ? ஒருவரையுமே கண்ணில் காணோமே ? இறந்தவரின் சொந்தக்காரர்கள், இறந்தவரின் மனைவியின் சொந்தக்காரர்கள்
எங்கே சென்றார்கள் /

தேடின‌தில் அதே வீட்டில் ஒரு அறையில் மிக‌ப்பெரிய‌ வாக்குவாத‌மும் உர‌த்த‌ குர‌லில் ச‌ண்டையும் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து.

இற‌ந்த‌வ‌ரின் தாயார் இற‌ந்த‌வ‌ரின் ம‌னைவியின் கைகள் மற்றும் க‌ழுத்திலிருந்த‌ ஒரு ப‌த்து ப‌வுன் ந‌கை த‌ன‌க்குச்சேர‌‌ வேண்டும் என்ப‌தில் குறியாக‌ இருந்தார் என்ப‌து அவ‌ர‌து செய‌ல்க‌ளிலிருந்து புல‌ப்ப‌ட்ட‌து.இறந்து போன எனது நண்பர் தனக்குத் தம்பி எனச் சொன்ன ஒருவர், ஒரு ஓரத்தில் ஏதோ வரவு செலவு கணக்கு போட்டுக்கொண்டு இருந்தார்

ம‌ற்ற‌ உற‌வின‌ர், இற‌ந்த‌வ‌ருக்கு இறந்தவரின் வாரிசுகளுக்கு இற‌ப்புக்குப்பின் அவ‌ர் வேலை புரியும் நிர்வாக‌த்திலிருந்து என்னென்ன‌ கிடைக்கும் என்ப‌தை ஆராய்ந்து அதில் எது எது யார் யாருக்கு என‌ க‌ண‌க்கிட்டுக்கொண்டிருந்த‌‌ன‌ர்.

ந‌ண்ப‌ரின் ச‌வ‌ம் அப்ப‌டியே இருந்த‌து.இறந்தவரின் மனைவி கதறிக்கொண்டிருந்தார்
குழந்தைக‌ள் க‌த‌றிய‌ வ‌ண்ண‌மே இருந்த‌ன‌ர்
.

துக்க‌த்தில் ப‌ங்கு கொள்ள‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் செய்வ‌த‌றியாது திகைத்து அதிர்ச்சியுற்று
இருந்த‌ காட்சி இன்னமும் நினைவில் உள்ளது.

அங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

Saturday, May 23, 2009

நான் செய்வது பாரதியின் சரஸ்வதி பூஜை





Courtesy:
தமிழ்.வெப்துனியா சென்னை, திருனின்றவூர் அருகில் கசுவா கிராமத்தில் நடப்பது

மனித நேயத்திற்கோர் மகத்தான வேள்வி.

சேவாலயா ...

அதுபற்றிய விவரங்களை இங்கு திரு முரளிதரன சொல்லக்கேளுங்கள்.


இதைப் படிக்கும்போது எனக்கு 11 வயதுதான். அப்போது, பள்ளி ஆரம்பிக்க வேண்டும், உணவு போட வேண்டும் என்று சின்ன சின்னதாக எண்ணங்கள் தோன்றின. ஆனால் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு அதற்கான சிந்தனைகள் உதித்தன.

என்னுடன் படிக்கும் மாணவர்கள் 20 பேர் சேர்ந்து விவேகானந்தர் அமைப்பு என்று உருவாக்கி, எங்கள் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களை ஒன்றாக சேர்த்து வருவோம்.

மாதத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று இனிப்பு, பிஸ்கேட் போன்றவை வாங்கிக் கொண்டு சென்று அவர்களுக்குக் கொடுத்து, பாடி, ஆடி மகிழ்ந்துவிட்டு வருவோம்.

அப்போது, அந்த ஆதரவற்றோர் இல்லங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது போன்ற பல விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டேன்.

தமிழ்.வெப்துனியா: நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்?

பெங்களூரில் பொறியியல் படித்தேன். எலக்ட்ரானிக்ஸ் துறையில் படித்தேன். அங்கு படிக்கும்போதும், அப்பகுதியில் இருக்கும் குடிசைப் பகுதிக்கு வாரந்தோறும் சென்றுவிடுவேன்.

அ‌ந்த குடிசை‌ப் பகு‌தி‌யி‌ல் வா‌ழ்பவ‌ர்க‌ள் ஊதுபத்தி செய்வார்கள். ஊதுப‌த்‌தி தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் இரு‌ந்து ஊதுப‌த்‌தி கு‌ச்‌சிகளையு‌ம், மரு‌ந்துகளையு‌ம் காலையில் வந்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்த குடிசைப் பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் ஊதுபத்தியை ஒட்டி மாலையில் கொடுத்துவிட வேண்டும். பிள்ளைகள் பள்ளிக்கு எல்லாம் செல்ல மாட்டார்கள். இதையேதான் செய்வார்கள்.

நான் அந்த ஊதுபத்தி கம்பெனிக்குச் சென்று சனிக்கிழமை மாலையில் இவர்களுக்கு விடுமுறை கொடுங்கள். அந்த சமயத்தில் இங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு சம்மதித்தார்கள்.

அந்த குடிசைப் பகுதியின் ஒரு மூலையில் அங்குள்ள பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன்.

அந்த சமயத்தில்தான் பள்ளி ஒன்றைத் துவக்க வேண்டும், உணவு அளிக்க வேண்டும். முடியாத முதியவர்கள் தங்க இடமளிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி வளரத் துவங்கியது.

ஆனால் அதற்கு நிறைய காசு வேண்டும். இப்படி ஒன்றை செய்யப் போகிறேன் என்று சொல்லிக் காசு கேட்டால் யாரும் தர மாட்டார்கள். செய்து காண்பித்தப் பிறகு இப்படி செய்கிறேன், உதவுங்கள் என்று கூறினால் கிடைக்கும். எனவே முதல் 6 மாதத்திற்காவது நமது சேமிப்பில் காசு இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அதனால் வேலைக்குப் போய் ஒரு 3 ஆண்டுகள் காத்திருந்தேன். 3 ஆண்டுகளில் கொஞ்சம் காசு சேமித்து வைத்து, 6 மாதத்திற்கு நன்கொடை எதுவும் வாங்காமல் சமாளிக்க முடியும் என்று முடிவெடுத்தேன்.

தமிழ்.வெப்துனியா: முதலில் என்ன செய்தீர்கள்? இடம் வாங்கினீர்களா?

இல்லை. இடம் வாங்குவதெல்லாம் பல ஆண்டுகள் கழித்துத்தான் செய்தேன். முதலில் ஒரு வாடகை வீட்டைப் பிடித்து தாய் தந்தையை இழந்த 5 பிள்ளைகளைக் கொண்டு வந்து வைத்தேன்.

அவர்களுக்கு சாப்பிட உணவு மட்டும் கொடுத்து, அங்குள்ள பள்ளி ஒன்றுக்கு அனுப்பி வந்தோம். இப்படியே எங்கள் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது.

அந்த சமயத்தில் டி.சி.எஸ்.ஸில் வேலை கிடைத்து நான் ஒரு வருடம் அமெரிக்கா போய் இருந்தேன்.

60 பேர் என் கூட வேலை செய்தார்கள். ஒரு கூட்டம் நடந்தது. வேலை விஷயமாகப் பேசிய பிறகு பொதுவான எதையாவது பேச வேண்டிய நேரத்தில் நான் இந்த அமைப்பு பற்றி எடுத்துச் சொன்னேன். நான் இப்படி ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இதற்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும். நீங்கள் எல்லோரும் உதவி செய்தால் நிச்சயம் வாங்கலாம் என்றதும் அனைவரும் ஆதரவு தெரிவித்து உதவி செய்தார்கள். அதன் பலனாக இங்கு நிலம் வாங்கினேன்.

1991ஆம் ஆண்டில் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினேன். அங்கு ஒரு கொட்டகை போட்டு வைத்தேன். அப்போது சுமார் 30 பேர் ஆகிவிட்டனர்.

தமிழ்.வெப்துனியா: இப்போது உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் அல்லவா?

1000 பேரில் 160 பேர் மட்டும் பள்ளியில் தங்கும் இடத்தில் தங்கி விடுவார்கள். மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். 160 பேருக்கு சொந்தமென்று யாரும் இல்லை. மற்றவர்களுக்கு உண்டு. ஆனால் பொருளாதார நிலைமையில் பார்க்கப்போனால் எல்லோருமே ஒரே நிலையில்தான் உள்ளனர்.

பள்ளி அமைக்க நிலம் வாங்கிய பிறகு பள்ளிக் கட்டடம், விடுதிக் கட்டடம் கட்ட பணம் திரட்டினேன். ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு நபர்களைக் கேட்டு உதவி பெற்று கட்டினேன். தற்போது அந்தப் பள்ளியில் 35 வகுப்பறைகள் உள்ளன. இப்படி பல்வேறு உதவிகளைப் பெற்று ஒரு பள்ளி உருவாகியுள்ளது.

பள்ளி ஆரம்பித்து 3 வருடத்திற்கு தொடர்ந்து 10ஆம் வகுப்பில் முழு தேர்ச்சி கிடைத்தது. பத்திரிக்கைகளில் எல்லாம் வந்தது. இது பற்றி கேள்விப்பட்ட ஒரு பெரியவர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அப்போது பள்ளி பாதிதான் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அந்த பெரியவர், இப்போ உங்களுக்கு எவ்வளவுத் தேவைப்படும் என்று கேட்டார். நாங்கள் கணக்குப் போட்டுப் பார்த்து நாலைந்து லட்சமாகும் என்று சொன்னோம். அதற்கு அவர், நாளைக்கு வந்து செக் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

முதல் தளம் அமைக்க நிறைய கஷ்டப்பட்டோம். நிறைய நாள் எடுத்துக் கொண்டோம். ஆனால் தேர்வு முடிவுகள் நன்றாக வந்ததால், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டது.

அடுத்தது என்னவென்றால், அங்குள்ளவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். அங்கு படிக்க யாருமே ஆர்வம் காட்டாததால்தான் அங்கு பள்ளியே இல்லை.

அங்கிருப்பவர்களில் இரண்டு ரகம், ஒரு சில மேல்தட்டு குடும்பங்கள் பெரிய பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தனர். மற்றொரு ரகம் கூலி வேலை செய்பவர்கள், அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணமே இல்லாதவர்கள்.

நாங்கள் ஒவ்வொரு வீடாகப் போய் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினோம். அதற்கு பெற்றவர்களோ, அவனை பள்ளிக்கு அனுப்பினால் ஒரு நாள் கூலி போய்விடும். அதை நீங்கள் தருவீர்களா என்று கேட்டார்கள்.

படிப்பு செலவை நீங்கள் செய்ய வேண்டாம். எல்லாமே நாங்கள் இலவசமாக தருகிறோம். பணமெல்லாம் கொடுக்க முடியாது. அவன் படித்து வந்தால் பெரிய வேலையில் சேர்ந்து உங்களை நல்லபடியாக வைத்துக் கொள்வான் என்று சொல்லி ஒவ்வொரு பிள்ளையாக பள்ளிக்கு வரவைத்தோம்.

இங்கு வந்த பிறகு அவர்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழிற் கல்வியையும் அளித்து வருகிறோம். மாணவர்களுக்கு ஒழுக்கமும் கற்பிக்கப்படுகிறது.

இதோடு அல்லாமல், அங்கு பொதுப் பிரச்சினைகளிலும் தலையிட்டு தீர்வு கண்டுள்ளோம், சாராயம் காய்ச்சுதலை நிறுத்தினோம், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அங்குள்ள பொதுமக்களே எங்களை நாடி வந்து கூறுகின்றனர். நாங்களும் தலையிட்டு தீர்வு காண்கிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்களது துவக்க காலத்தில் உங்களுடன் இருந்த நண்பர்கள் இப்போதும் உங்களுடன் உள்ளார்களா?

பலர் உள்ளனர், சிலர் தொடர்பில் இல்லை. பல புதியவர்கள் இணைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் பள்ளிக்கு வாருங்கள் என்று அழைத்த நிலை மாறி, இப்போது பலர் எங்கள் பள்ளிக்கு வந்து, அது என்ன ஏழைகளுக்கு மட்டும், எங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்துகிறோம் என்று கேட்கிறார்கள்.

எங்கள் கொள்கையே, ஏதும் இல்லாத பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதுதான், எங்கள் இலக்கை மாற்றி விடாதீர்கள் என்று கூறி அனுப்பி விடுகிறோம்.

பணம் கட்டி மாணவர்களை சேர்த்துக் கொண்டால், அவர்கள் அதிகமாகிவிடுவார்கள், இவர்கள் குறைந்துவிடுவார்கள். பணம் கட்ட முடியும் என்றால் வேறு எங்காவது சென்றுவிடுங்கள். முடியாதவர்கள் மட்டும் இங்கு வாருங்கள் என்று கூறுகிறோம்.

தமிழ்.வெப்துனியா: உங்கள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பற்றி கூறுங்கள்?

கடந்த ஆண்டு உமா மகேஸ்வரி என்பவர் 1160/1200 எடுத்தார், ராமச்சந்திரன் 1082/1200 எடுத்தார். இந்த மாணவர்களின் பெற்றவர்கள் கூலி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு அண்ணா பல்கலையில் மெரிட்டில் பொறியியல் படிக்க வாய்ப்பு வந்தது. அந்த கட்டணத்தையும் நாங்களேக் கட்டி அவரை படிக்க வைத்து வருகிறோம்.

மேல் படிப்பிற்கு நாங்கள் பணம் கட்டி படிக்க வைக்கிறோம் அல்லது அவர்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து விடுகிறோம், படித்து வேலையில் சேர்ந்ததும் அந்தக் கடனை அவர்களே செலுத்திவிடுவார்கள். இதற்காக ஒரு வங்கியில் பேசியுள்ளோம். எங்களது சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கு வங்கிக் கடன் அளிக்க உதவுமாறு கூறியுள்ளோம்.

10வது வகுப்பில் 500க்கு 460 மதிப்பெண் பெற்றுள்ளார் ஒரு மாணவர். எங்கள் பள்ளியில் 10வது முடிக்கும் பிள்ளைகள் மீண்டும் எங்கள் பள்ளியிலேயே 11வது வகுப்பில் சேர்ந்து விடுவார்கள்.

இதில் குறிப்பாக ஒரு பையனைக் குறிப்பிட வேண்டும். அவனது அப்பா இவனது சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர்கள். அந்த அம்மா எங்கள் பள்ளிக்கு அந்த பையனை அழைத்து வந்து, இவனை இங்கேயே தங்க வைத்து படிக்க வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவன் நல்லா படிச்சு மேல் படிப்பிற்கும் உதவி செய்தோம். அவன் தற்போது ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியராக உள்ளான். டிசிஎஸ்ஸில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறான்.

தற்போதும் அவன் சனி, ஞாயிறுகளில் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் இருப்பான். அவனது ஆர்வத்தைப் பார்த்து அவனையும் அறக்கட்டளையின் உறுப்பினராக்கியுள்ளேன். பல்வேறு விதங்களில் அங்கிருந்தவன் என்ற முறையில் அவனது ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும் என்பதால் அப்படி செய்துள்ளோம்.

தமிழ்.வெப்துனியா: ஒழுக்கத்தை எப்படிக் கற்றுத்தருகிறீர்கள்?

பாரதி, விவேகானந்தர், மகாத்மாவின் கருத்துக்களை பல்வேறு பாடத் திட்டங்களாக தொகுத்து அதற்காக ஒரு பாடத்திட்டம் வைத்துள்ளோம். அதை வைத்துத்தான் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகிறோம்.

பெங்களூருவில் ஒரு அமைப்பு, புதிய முறையில் பாடத்திட்டத்தை புகுத்திய பள்ளிக்கு தேசிய விருது ஒன்றை அறிவித்தது. அதற்கு நாங்கள் இந்த நல்லொழுக்கப் பாடத் திட்டத்தினை விளக்கி விண்ணப்பித்தோம்.

சுமார் 22,000 பள்ளிகள் விண்ணப்பித்திருந்தன. எல்லாமே நகர்ப்புற பள்ளிகள் அனைத்தையும் தாண்டி, எங்களது சேவாலயாப் பள்ளி விருதினை வென்றது.



webdunia photo WD

இந்த பாடத்தை மற்றப் பள்ளிக் கல்லூரிகளிலும் சிறு வகுப்புகள் நடத்தி எடுக்கிறோம். இதனைக் கேள்விப்பட்ட சிறைத்துறை அதிகாரி நடராஜ் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார். அந்த அடிப்படையில் தற்போது நல்லொழுக்கப் பாடத்தைப் பற்றி புழல், வேலூர் சிறைகளில் கைதிகளுக்கும் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

அங்கு இதைப்பற்றி சொல்வது மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. ஒரு சில கைதிகள், எங்கள் தண்டனைக் காலம் முடிந்ததும், நாங்கள் சேவாலயாவிற்கு வந்துவிடுகிறோம், அங்கு சேவையாற்றி எங்கள் காலத்தை கழிக்க விரும்புகிறோம் என்கிறார்கள.
(தொடரும்)







--------------------------------------------------------------------------------

Wednesday, May 20, 2009

பட்டாம் பூச்சி விருதும் பக்க விளைவுகளும்.






பட்டாம் பூச்சி விருதும் பக்க விளைவுகளும்.

" வாங்க ! மன்மோஹன் சிங்க் ஸாரா ! ஆச்சரியமா இருக்கே ! குட் மார்னிங்க்.
என்ன இவ்வளவு தூரம்."

"என்னது ! பிரசிடென்டை பார்க்கிரதுக்கு முன்னாடி என்ன பார்த்துட்டு பேசிட்டுப் போலாம்னு வந்தீகளா !"

" அடடே ! எனக்கா ! காபினட் மந்திரி போஸ்டா ! அட வேணாம்க !"

" அதுக்குல்லேங்க.. ரொம்ப வயசாச்சுல்லே ! ஏதோ எனக்குத்தெரிஞ்ச விசயத்துலே
ஒன்னு ரண்டு உளரிட்டு இருக்கேன். இதுக்கு ஒரு ரிகக்னிஷன் மாதிரி ஒரு
காபினட் போஸ்ட்னா ரொம்ப ஜாஸ்திங்க.."

" அப்படி என்னதான் போஸ்ட்ங்க..? அட ! மினிஸ்டர் ஆஃப் கல்சுரல் அஃபேர்ஸா ! அதுவும்
அட்டேச்டு டு ஃபாரின் மினிஸ்டிரியா ! தேவலாமே !"


(( மன்மோஹன் சிங்க் சாரிடம் பேசிக்கொண்டிருக்கையிலே
நடுவிலே உள் மனசு கரடி புகுந்தாற்போல் புகுந்து " அடே சுப்பு ரத்தினம் !

வள்ளுவர் என்ன சொன்னார் நினைவு இருக்கிறதா ?

அன்பறிவு, தேற்றம், அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு

உன்னிடம் இந்த நான்கில் எது இருக்கிறது என்று நினைத்துப்பார். அவசரப்படாதே என்றது.

அதே சமயம் மனசோ " இதெல்லாம் ஒன்னும் வேண்டாம். குபேரன் கண்ணைத்திறந்து
பார்த்துவிட்ட்டான். விட்டுவிடாதே சந்தர்ப்பத்தை." என நப்பாசையை மேலும் கிளறியது.))



" அது சரி, நன்னா யோசிச்சு இருப்பீங்க .. அதுதான் வந்து இருக்கீங்க..
இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க.. முடியாதுன்னா நன்னா இருக்காதுல்லா.. "

" சோனியா அம்மாவும் சரின்னு சொல்லிட்டாகளா ! அட ! ரொம்ப தாங்க்ஸுங்க..!"

" நாளைக்கு ஸ்வேரிங்க் செரிமனியா !" வந்துட்டேன். வந்துக்கினே இருக்கேன். "

" அப்ப உத்தரவு வாங்கீக்கீகளா ! சரிங்க.. போயிட்டு வாங்க. நல்லபடியா அரசு நடத்தி
எல்லாருக்கும் நல்லது செய்யனும்னு ஒரே லட்சியத்தோட இருக்கர நீங்க . கடவுள்
உங்களுக்கு எல்லா வரத்தையும் தருவாங்க.. ! "

எங்கோ பாட்டு கேட்கிறது. " எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா ! "





" என்னது ! இந்தக் கிழவிய இப்பன்னு காணோம் ! வந்த சிங்க் ஸாருக்கு ஒரு தஞ்சாவூர்
டிகிரி காபிய் குடுத்து இருக்கக்கூடாதா ! இந்த கிழவியே அப்படித்தான்.!

" மீனாட்சி ! ஏ மீனாட்சி ! ஏ மீனாட்சி ! "

" என்னங்க தூக்கத்துலே மீனாட்சி மீனாட்சின்னு கத்தறீங்க .. என்ன விசயம். ? எதுனாச்சும்
கனவாங்க. "

" ஆமாம் ! கனவுதான் போல இருக்கு ! அப்ப மன்மோஹன் சிங்க் ஸார் வந்து மினிஸ்டர் போஸ்ட்
அப்படின்னு சொன்னதெல்லாம் கனவா ! "

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, அத்தைனையும் சொப்பனந்தான் " என்று
சும்மாவா பாடினார் பாரதியார் !






" சரிதான் ! காலைலே நெட்லே உங்களுக்கு யாரோ தெரியாத்தனமா பட்டாம்பூச்சி விருது கொடுக்கப்போய் எனக்குத் தூக்கம் கெட்டு ப்போயிடுச்சு. ! பேசாம சாமி பேர மூணு தரம் சொல்லிப்போட்டு
தூங்குங்க
.. இன்னும் பத்து நாள்லே இந்தியாவுக்கு திரும்பிப்போயி ஜயசந்திரன் டாக்டர்ட்டே
கன்சல்ட் பண்ணிப்போடணும். அமெரிக்கா வந்தது தான் வந்தோம். மனுசனுக்கு உளரல் ஜாஸ்தி
ஆகிடுத்து. ! "

ஆஹா ! பட்டாம் பூச்சி விருது கொடுத்தாரே அந்த புண்ணியவான் கைலாசி முருகானந்தம் !
அவ்ருக்கு முதல்லே நன்னி சொல்லணும். அது சரி, ஜீவாவுக்கு கொடுத்தீக.. ரொம்ப சரி.

கவினயா மேடத்துக்கு கொடுத்தீக. அதுவும் சரி. எனக்கு எதுக்கு !

ஏதோ அப்பப்ப மனசுலே தோணரது எல்லாம் உளறதுக்கு ஒரு இடம் வேணும்லே ! அது தான்
நான் எழுதறது. பின்னூட்டம், முன்னூட்டம் எல்லாம். இதுக்குப்போய் ஒரு விருதா ! "

சரி, சரி, நன்றிங்க. நீங்க சொன்னபடி மூணு பேர் யார் யார்னு தேட ஆரம்பிக்கரேன்.கொஞ்சம் வைட் பண்ணுங்க

Friday, May 01, 2009

கனியிருப்பக்காய் !!!



அண்மையில் ரசனைக்காரி அவர்களின் வலைப்பதிவு காணும் வாய்ப்பு கிடைத்தது. மொழியின் தோற்றமும் தன் பரிணாம வளர்ச்சியும் அம்மொழியினை செப்பிடுபவர்தம் கடமையினைப்பற்றியும் அழகாக விளக்கியுள்ளனர்.

மனிதர் யாவரும் ஒருவருக்கொருவர் தம் எண்ணக்கதிர்களை மற்றோர் பால் செலுத்தும் கருவியாக மட்டும் மொழியை நினைத்திடாது, மனித சமூகமிடையே அன்பும், ஆதரவும், பண்பும் பெருக உதவிடுவதே மொழி என எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
.

என்பார் வள்ளுவப்பெருந்தகை.

அக்கனியிலும் சுவைத்து இன்புறும் கனியாக மொழி அமைதல் வேண்டும் என வலியுறுத்துகிறார் ரசனைக்காரி அவர்கள்.

அவர்களது சொற்களிலே:

//நம்முடைய மொழி வன்னொலி எழுப்ப அல்ல..இன்னொலியை அலைவரிசையாக்க..நம்முடைய பாஷை அசைவ சொற்களை உபயோகிக்க அல்ல..அன்பு நெறியை வலியுறுத்த..சமூகத்திற்கும்,வரும் சந்ததியருக்கும் நம்மால் முடிந்த உதவி இதுவாகட்டும்.


அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்”. //


ஒரு சொல்லைச் சொல்லிடில் அது பயனளிப்பதாக அமைதல் வேண்டும்.


சொல்லுக சொல்லைப் பயனடைய, சொல்லற்க,
சொல்லிற் பயனிலாச் சொல்

உலகம் இன்றுள்ள நிலையிலே அன்பில்லாத எந்த சொல்லுமே அது யார் பேசினாலும் எந்தச் சூழ்னிலையில் பேசப்படினும் பயனிலாச் சொல்லே.

அந்த அன்பு எப்படி தானாகவே விளையுமா ?

விளைச்சல் பூமியின் வளத்தைப் பொருத்ததன்றோ ? விதையின் தரத்தைப் பொருத்ததன்றோ ? பாய்ச்சப்படும் நீரின் தன்மையைப் பொருத்ததன்றோ ?

ஆகவே சொற்கள் அன்புவயப்பட்டதாக அமையவேண்டின், மனம் தூய்மைப்படுதல் தேவை. எந்த வித‌ எதிர்பார்ப்புமன்றி பிறர் நலம் பேணுவதே கடமையாகவும், தம் பிறப்பின் நோக்கமாகக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

வள்ளலார் அதுபோல் திகழ்ந்தார்.

எல்லோரும் வள்ளலாராக இயலுமா?

இயலாது எனினும் அதில் ஒரு விழுக்காடு மனமாவது நமக்கு வேண்டும் என நாம் விரும்பினால், அந்த விருப்பு வெறுப்பு யாவையும் கடந்த இறைவன் மேல் நமக்கு பற்று வேண்டும்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடுமபை இல.


இவ்வுலகத்தே காணுறும் இடும்பை யாவையும் அகன்றிட, நற்சிந்தனைகள் தோன்ற, நல்ல எண்ணங்கள் வழியே நல்ல வார்த்தைகள் சொல்லிட, ஆண்டவனே துணை புரியவேண்டும்.

இறைவனைப் போற்று முகத்தான், வாழ்த்தி நல்வழி பெற நமக்கு, தங்கமணி அவர்களின் வலைப்பதிவு துணையாக நிற்கிறது.


மேலும் தமது மார்ச் 24 பதிவில் எழுதுகிறார்:
வாழுகின்ற எல்லா உயிர்க்ளிடத்துமே மானிடம்தான் உயர்பிறப்பு.
ஆகவே, மானுடனாகப் பிறந்த யாவரும் இவ்வுலகில்
எவ்வுயிர்க்கும் நன்று செய்வோம் என சூளுரைக்கவேண்டும்.
இதற்கு வழி இறைவனடி சேர்வது தான் என்பார்.

அவர் எழுதிய பா இதோ !


ஊழின் வலிமையிது;உற்றிடும் பல்பிறப்பில்
வாழும் உயர்பிறப்பு மானிடம்தான்!---தாழுமோ?
நல்லுலகில் எவ்வுயிர்க்கும் நன்றுசெய்வோம்!என்றென்றும்
வல்லவன்சீர்ப் பாதம் மருந்து.




அங்கே செல்வோம். இறைவனை துதிப்போம். நல்ல எண்ணங்கள் பெறுவோம்.

மேடம் தங்கமணி இயற்றிய பாடல்கள் மூன்றினை நான் என்னால் இயன்றவரை பாட
முயன்றிருப்பதை காண்க









http://kavidhaithuligal.blogspot.com/