Pages

Sunday, February 20, 2011

மதம்கொண்ட யானை நான், மாதவா !



ஒரு மாமத யானை நம்முள் ஒளிந்து கொண்டு இருப்பதை நாம் குருவின் அருள் பெற்றால் அன்றி காண இயலாது. அந்த மமதையை, தான் என்னும் ஆணவத்தை, மனதிலே என்றும் குடியிருக்கும் அடங்காத ஆசைகளை, பேராசைகளை,  நம் குருவின் அருளால் அடக்கி நம்முள் அந்த இறைவன் குடி கொண்டிருப்பதை உணரவேண்டும் என பொருள்கூறும் திருமூலரின் இந்த பாசுரத்தை படித்துக்கொண்டிருந்தேன்.

மரத்தை மறைத்தது மாமத யானை.
மரத்தின் மறைந்தது மாமத யானை.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

இப்பாடலின் பொருளை மனதிற்குள் வாங்கும் காலையில் மனதிலே ஒரு யானை வந்தமர்ந்திருப்பது போல‌......
ஒரு பிரமையா என்ன அது !! திடுக்கிட்டேன். பாடல் புத்தகத்தை மூடிவிட்டு, கணினியைத் திறந்தேன். அதில்......
நான் வழக்கமாகப் படிக்கும் வலைப்பதிவுகளில் ஒன்றான " வெண்பா வனம் " அதில் திகிழ் அவர்கள் ஒரு வெண்பா எழுதியிருந்தார்கள். எனது அப்பொழுதைய மன நிலைக்கு மிகவும் ஒத்து இருந்த அந்த வெண்பாவை

பாடலாம் என நினைத்தேன். பாடியும் விட்டேன்.

அது இதோ !!








மதம்கொண்ட யானைநான், மாதவா ! உந்தன்
இதம்கொண்ட பார்வையால் ஈர்த்திடு !- உந்தன்
கதம்கொண்டே எந்தன் கவலைகளை யெல்லாம்
வதம்செய் தெனைக்காத் திடு !

அம்மாதவனே என் ஆசானாக வந்து எனக்கு அருள் புரியவேண்டும். என் மன இருள் அகற்ற வேண்டும். 

இந்த பாட்டை பாடி முடித்தபின் திகழ் அவர்களிடம் எப்படி சொல்வது எனத் 
தெரியாது திகைத்து நின்றேன்.  அவர்கள் வெண்பா வலைப்பதிவில் ( அது  உண்மையில் ஒரு வனமா  அல்லது வண்ணப்பூங்காவா  என்று பிரமித்து போகிறோம். ) பின்னூட்டத்திற்கு இடம் இல்லை. அவர்கள் இ மெயில் ஐ.டி யும் இல்லை. அவர்களே வந்து பார்த்தால் தான் உண்டு.
வருவார்கள் !! மாதவன் அல்லவா அழைத்துக்கொண்டு வருவார் !!!




Thursday, February 17, 2011

இட்லியும் எஸ்.வீ. சேகரும்.

இட்லியும் எஸ்.வீ. சேகரும். 

எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது. புரியவும் புரியாது.  அதனால் அதைப்பற்றி நான் எப்பொழுதும் எழுதுவது கிடையாது. அரசியல் பற்றி பத்திரிகைகளில் படிப்பதன் காரணமே இன்றைய கால கட்டத்தில் அதைவிட நகைச் சுவை காட்சிகள் அளிக்கும் அரங்குகள் கிடையாது என்று நான் நம்புவதுதான். 

நிற்க. நகைச சுவையாக இருக்கும் வலைப்  பதிவுகளில் ஒன்று இட்லி வடை. அதனால் அங்கு போய் படிப்பேன்.  சென்ற ஒரு வாரத்தில் தமிழ் திரை உலகத்தின் நகைச் சுவை நடிகர், மயிலை எம் எல் எ. திரு எஸ்.வீ. சேகர் அவர்கள், ஒரு கட்சியில் இருந்து, மற்றும்  ஒரு குறிப்பிட்ட கட்சிக்குப் போவார் என்று பொதுவாக மக்கள் நினைக்கும் சமயம், அவர் இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்ததை பற்றி இந்த வலைப்பதிவில் எழுதி இருக்கிறார்கள்.  அவரும் அதற்கு பதில் விளக்கமளித்து இருக்கிறார். அதெல்லாம் எனக்கு ஒரு பொருளாக இல்லை. அவர் எந்த கட்சியில் இருந்தார் , இனி எங்கே இருக்கப்போகிறார் என்பது எனக்கு முக்கியமில்லை.


என்னைப் பொறுத்தவரை அவர் தனக்கு இட்லி பிடிக்காது என்று சொல்லிவிட்டாரே ! என்று தான் மனம் உடைந்து போய்  இருக்கிறேன். வழக்கமாக என் நண்பர்கள் வலையில் காணப்படும் கவிதைகளுக்கு மெட்டு போடுவது வழக்கம். இன்று அதில் மனம் செலுத்த இயலவில்லை.  இட்லியை போய் பிடிக்காது என்று ஒரு நகைச் சுவையாளர் என உலகுக்கு அறிமுகமானவர் சொல்லிவிட்டாரே  என்று மனம் வருந்துகிறது. 

தமிழ் நாட்டின் தலையாய சிற்றுண்டியே 
இட்லி தானே.! ஒரு சூடான இட்லி சாம்பார் சாப்பிட்டபின் தானே உடலில் ஒரு புது உணர்வு பிறக்கிறது.  ஒரு குழந்தைக்கு ஒரு வயது ஆனா உடனே இட்லி கொடுக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்களே.!! ஒருவனுக்கு வயிறு சரியில்லை என்று இருந்தாலும் இட்லி சாப்பிடலாம் என்று அனுமதி தருகிறார்களே !! அதில் உள்ள ப்ரோ பயோடிக் சத்துக்கள் பற்றி உலகமே அறிகிறதே !!
இட்லி சாம்பார் என்றாலே உலகத்தில் தமிழன் உணவு என்று தானே சொல்வர்.  அமெரிக்கா, ஆப்ரிகா, ஆஸ்த்ரேலியா மட்டுமன்றி, தமிழன் ஒருவன் அண்டார்டிகா சென்றபோதிலும் இட்லி மாவை மறக்காமல் எடுத்துக்கொண்டு போனான் என்று தானே சரித்திரம் சொல்கிறது.  நான் போன வருடம் அமெரிக்கா சென்று அங்கு எனது நாக்கு செத்து சுண்ணாம்பு ஆன நேரத்திலே எடிசன் நகர சரவணா பவன் தானே எனக்கு இட்லி சாம்பார் அளித்து எனக்கு புது உயிரை அளித்தது !!
ஒரு திருமணம் என்றால், அதிகாலை உணவு இட்லியும், பொங்கலும் தானே. !

அதை பிடிக்காது என்று சொல்லி இவர் எப்படி சொல்வார் ? !!!
வெகுண்டு எழுந்தேன்.  அந்த பதிவிலே ஒரு பின்னூட்டம் போட்டேன். அதை அவர்கள் பிரசுரிக்க வேண்டும். அதை அவர் படிக்க வேண்டும்.  இதெல்லாம் நடக்காது.  அதனால், அங்கே நான் எழுதிய பின்னூட்டத்தை இதிலே இடுகிறேன். 
ஒன்று மட்டும் சொல்ல கடமைப் பட்டுள்ளேன். இட்லியை பழித்தவர்கள், பகைத்தவர்கள், புறம் பேசுபவர்கள், ஒதுக்குபவர்கள், ஓரம் கட்டுபவர்கள்  யாராக இருந்தால் என்ன !! தமிழ் நாடு எனது, தமிழன் நான் என்றெல்லாம் சொல்லமுடியாது.  அதுவும் மயிலை இட்லி யின் மையம்.  இட்லி பிடிக்காதவர்களை இந்த தொகுதி மக்கள் ஆதரிப்பார்களா ? எனக்குத் தெரியவில்லை.

நிற்க. 
பின் வருவது நான் இட்லி வடை வலைப்பதிவில் எழுதிய பின்னூட்டம். 
சேகர் சார் !!
   உங்களுக்கு இட்லி பிடிக்காதா !!  ஒரு வேளை வெறும் இட்லி மட்டும் சாப்பிடுகிறீர்கள் போல்     இருக்கிறது.  அதனால் தான் !!எனக்கு தெரிந்தவரை உங்கள் புகுந்த வீடு தஞ்சைத் தரணி அல்லவா ? அங்கே வெற்று  இட்லி பரிமாறுவது சாப்பிடுவதே சம்பிரதாய விரோதம் ஆனதே !!

    இட்லிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, வெங்காய சாம்பார், கொத்ஸு,   புதினா சட்னி, வெங்காய சட்னி, கடப்பா சாம்பார், இதையெல்லாம் சேர்த்து சாப்பிட உங்களுக்கு
 தெரியாதா என்ன ? சில பேர் ஊறுகாயும் சேர்த்துகொள்வார்கள். வெங்காய
வெத்தக் குழம்பு அல்லது மிளகு குழம்பு தொட்டுக்கொண்டால் !!! ஆஹா !! அல்லது மோர்குளம்பில் இட்லியை மிதக்கவிட்டு சாப்பிட்டால் அதன் ருசியே தனி.  இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இருக்கிறதே என்று அதிசயமாக இருக்கிறது.உங்களது நகைச் சுவை நாடகங்களில் இட்லி வரவே இல்லையா !!

 இட்லியில் சாதாரண இட்லியைத் தவிர காஞ்சிபுரம் இட்லி இருக்கிறது. அதுவும் வேண்டாம் என்றால்   ரவா இட்லி இருக்கிறது.  கோதுமை மாவு கலந்த இட்லியும் உங்களுக்கு டயாபிடிஸ் இருந்தால் ( God Forbid ?)     நல்லது. சரவணா பவனில் பதினைந்து இட்லி என்று சின்ன சின்ன கோலிக்குண்டு போல இட்லி தருகிறார்களே !! சுகமோ சுகம் அல்லவா அது !!


  வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, பெருங்காயம் போட்டு,
    இட்லி மிளகாய் பொடி தூவி, பிறகு கருகப்பிலை, கொத்தமல்லி கிள்ளி போட்டு இட்லியை திரும்பவும் உதிர்த்து   நன்றாக பொன் நிறம் வந்தபின் சாப்பிடுங்க  ஜோர் ஜோர் என்று சொல்வீர்கள்.  


   முக்கியமாக, இட்லி அரிசி என்றே புழுங்கல் அரிசியில் இருக்கிறது. ஒரு வேளை உங்கள் வீட்டில்    சாப்பாட்டு அரிசியை உபயோகித்து விட்டார்களோ என்னவோ ! அதில் இட்லி செய்தால், கொஞ்சம்
   கொழ கொழ என்று தான் இங்கேயா, அங்கேயா என்று திண்டாடும் திருசங்கு போல் இருக்கும். ( ஹ்யூமர் ஒன்லி )


   இன்னொன்றும் இருக்கிறது.  இட்லி அரைக்கும்பொழுது ஒரு பங்கு உளுந்துக்கு நாலு பங்கு அரிசி    இருக்கவேண்டும்.  மைய அரைக்கவேண்டும்.  அரைத்த மாவை நன்றாக கிளறி விட வேண்டும். இரண்டு நாட்கள் ஆகிவிட்டால் உளுந்து மேலே வந்து விடும்.  பிறகு வார்க்கும் இட்லிகளில் அரிசி மட்டும் தங்கி விடுவதால் கொஞ்சம் கெட்டி ஆகி விடும். இது இல்லத்து அரசிகள் அனைவருக்கும் தெரியும். 


   இத்தனையும் சொன்ன பிறகும் உங்களுக்கு இட்லி பிடிக்காது என்றால், வேற வழியே இல்லை.


   உங்கள் செல்லுக்கு ஃபோன் செய்கிறேன்.  ஒரு நாள் காலை குடும்பத்தோடு எங்கள் வீட்டிற்கு    வரவும்.  இட்லியைப்போல காலை சிற்றுண்டி உண்டா என திகைக்க வைக்கிறேன்.


   சுப்பு தாத்தா.
  

  











Saturday, February 05, 2011

வாவா மணிவண்ணா வா.



வாவா மணிவண்ணா வா
என்ன ஒரு அற்புத இலக்கிய படைப்பு !!
அதில் இசை கலந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கர்நாடக சங்கீத மெட்டு
ஆனந்த பைரவி ராகத்தில் பாடியிருக்கிறேன்.
மேடம் திகழ் அவர்களின் வெண்பாவைக் கண்டு ரசிக்க இங்கே கிளிக்குங்கள்.