Pages

Sunday, December 23, 2007

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் ‍ மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து ......திருவள்ளுவர்.

எதை எண்ணிடினும் உயர்வாகவே நினை என்றார் வள்ளுவர். மற்ற எண்ணம் எதனை விட்டபோதிலும்
உயர்வாகவே எண்ணவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடாது இரு என்பார்.

இது எப்படி சாத்தியம் ? உயர்வாக எண்ணுதல் மனத்தின்பாற் பட்டது. மனம் தெளிவுற, மாசற்றதாக‌
இருப்பின் மட்டுமே ஒருவன் உயர்வாக எண்ணுதல் சாத்தியம்.


எண்ணங்கள் தாம் எல்லாவற்றிற்கும் அடிப்படை. இந்த எண்ணங்கள் மாசற்று இருப்பின் நமது சொற்களும் செயல்களும் தாமாகவே மாசற்றதாக மட்டுமன்றி நமக்கும் மற்றோருக்கும் நன்மை பயக்க வல்லதாக அமையும்.

ஆகவே, வள்ளூவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் = அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

என ஒருவனுடைய மனம் மாசற்று தூய்மையாய் இருப்பின் அதுவே எல்லா அறமும்.
மற்றவை எல்லா அறவெழிக் கருமங்கள் என சொல்லப்படும் அனைத்துமே மனத்தூய்மைக்கு
எதிரில் நீர்த்துப் போனவை ஆகும் என்பார்.


மனம் தூய்மையாவதற்கு என்ன செய்தல் வேண்டும்?
முதல் வழி வாய்மை.

"வாய்மை எனப்படுவது யாதெனின் = யாதொன்றும்
தீமை இலாத சொலல் " என்றார்.

மறுபடியும் "சொலல்" எனச்சொல்லி சொற்களின் சிறப்பை நினைவூட்டுகிறார்.
ஆக, நம் வாய் வழி வரும் வார்த்தைகள் மீது மிக கவனமாக இருத்தல் வேண்டும்.
ஏன், எனின் சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமான்.
சொல்லை சொல்லிவிட்டாலோ, சொல்லிய சொல் நமக்கு எஜமான்.
அப்போது, ஒரு சொல்லை சொல்ல முயல்கையில் என்ன செய்தல் வேண்டும் ?

"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க " என்றார்.

எதை நாம் பொய் அன்று நமது மனச்சாட்சி உணர்கிறதோ அதை சொல்லாதே ! என்றார்.
அறவழிக்கு அடிப்படையே நமது மனச்சாட்சிக்கு முதன்மை கொடுப்பது தான்.
அப்படிப்பட்ட மனதை தீய வழிகள் பால் செல்லவிடாது, நன்றின் பால் உய்ப்பது முதல் வழி.

"சென்ற விடத்தாற் செலவிடாது தீதொறி
நன்றின் பால் உய்ப்பது அறிவு."

இந்த நுண்ணிய அறிவு, (தீது எது நன்மை பயப்பது எது என சீர்தூக்கி ப்பார்த்து நன்மைபால் மனதை ஒழுங்குபடுத்துவது) மானிட வர்க்கத்திற்கு இன்றியமையாததாகும்.
இந்த அறிவு தான் அற நெறியில் மனிதனை நடத்திச் செல்ல இயல்புடையதாகும்.
இந்த அறிவினைக் கொண்டவன் புகழைத் தேடிச் செல்ல அவசியமில்லை.
அவனை புகழ் தானே வந்தடையும்.
இந்த அறிவினைப் பெற நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரே வழி:

எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

என்ற வள்ளுவரின் பொய்யாமொழிதனை
நாள் தோறும் நினைவில் நிலை நிறுத்துவோம்.

Sunday, December 16, 2007

த‌வ‌ம்

தாயுமானவர் பாடல்கள் அற்புதமானவை.


"மாயா விகார மலமொழிகத் தாவத்தை
தோயா அருளைத் தொடரு நாள் எந்நாளோ?"

"தான்" என்பதை மறந்து "அவன்" தான் நான் என மன நிலை ஏற்படுவது எளியது அல்ல. எப்பொழுதுமே தனது சொத்துக்கள், தன்னைச் சேர்ந்தவர், தன்னுடைய உடல் இவற்றினைப்பற்றியே எணணுகின்ற மனிதன், இறைவன் தன்னுள்ளே இருப்பதையும் தனது இதயத்தில் அவனை நிலை நிறுத்தி தியானிப்போர் அவனை தம்முள் காணுவர் என்ற உண்மையும் எளிதாக உணர்வதில்லை. உலக மாயையின் காரணத்தினால் மட்டுமன்றி மனிதனுக்கு சுபாவத்தினால் உள்ள காம க்ரோத மத மாத்சர்ய ஆகிய‌
மலங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்

இத‌ற்கென‌ ஒரு கால‌ கட்ட‌ம் இருக்கிற‌தா என்ன‌? த‌ன்னை உண‌ர்ந்து த‌ன் ம‌ய‌மாவ‌து
அஸ்ப‌ர்ஸ‌ யோக‌ம் என்ப‌ர்.

இத‌ற்கான பெருமுய‌ற்சி தான் த‌வ‌ம். த‌வ‌த்தினை மேற்கொண்ட‌வ‌ர் த‌ன்னை புதுப்பித்துக்கொள்ள‌ இய‌லும். த‌ன்னை மாற்றிக்கொள்ள‌ இய‌லும். ஒன்றிலிருந்து
ம‌ற்றொன்றாக‌ ஆக‌ இய‌லும்.

தான் இறைவ‌னிட‌மிருந்து வேறு என நிலை அழிந்து இறைவன் தன்னிடத்தே தான்
உள்ளான் என்ற நிலை ஏற்படும்.

வள்ளுவர் தவத்தின் பெருமையைப் பற்றி கூறுகையில்:

"வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்படும் "