Pages

Wednesday, February 20, 2013

இதுவும் கடந்து போம்.

உனக்கு ஒரு பொருள் அதனைப் புலப்படுத்த வேண்டுமென இறை நினைத்தால் எங்கிருந்தாவது உன் காதுகள் கேட்கும் வண்ணம் உன் கண்கள் பார்க்கும் வண்ணம் உனக்கு ஒரு அசரீரி வரும்.  உனக்கு ஒரு பொருள் விளங்க வில்லை என்றாலும் உன்னிடம் ஒரு கேள்வி பிறக்கும் ஒரு கேள்வி உன்னிடம் இருந்து எழுந்தாலே அதற்கான பதில் உன்னைக் காத்திருக்கிறது .  

      பன்னாட்களாக எனது முதல் வலை ஆன இங்கே நான் எதுவுமே இடவில்லை  எழுதுவதற்கு என்ன இருக்கிறது?  எழுதியதெல்லாம் போதும். பேசியதெல்லாம் போதும். பேசியும் எழுதியும் தான் கடந்த ஐம்பது வருடங்கள் கழிந்தனவே, இனி கேள். அதுவும் அமைதியாகக் கேள் என்று எனக்கு நானே இட்ட கட்டளை.

     ஆயினும் நேற்று திறமிகு தி. தமிழ். இளங்கோ அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பு ஏற்று இருக்கிறார் எனத் தெரிந்து அவர் வலைக்கு சென்று பார்த்தேன் படித்தேன். ஒரு மூன்று வார்த்தைகள் தான்.

       இதுவும் கடந்து போம்.

      திரு இளங்கோ அவர்கள் அவருக்கே உரிய எளிய நடையில் ஒரு கதை சொல்லி இருந்தார் .
அந்த மூன்று வார்த்தைகளுக்கு நான் கண்ட பொருள் வேறு அல்ல என்றாலும் என் பாணியிலே அதை பின்னூட்டம் ஆக இட்டிருந்தேன்.

       மாலை வந்தது. சிவன் கோவிலுக்கு சென்றேன்.     உருவாயும் அருவாயும் உளதாயும் இலதாயும்  கல் ஆக அமர்ந்து எனைப்பற்றி விரிவாகக் கல் என வந்தோர்க்கு மௌனமே பாடமாய் சொல்லும் ஆலமர் கடவுள் முன் நின்றேன்.

      ஆகா !   ஈதென்ன விளையாட்டு ?

      இது என்றால் என்ன என எனக்குச் சொல்லத்தான் எனை நீ இங்கு அழைத்தாயோ ?

      என்றோ படித்த பாடல் நினைவுக்கு வந்தது.

      இது பதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
      முது பதி செய்தவன் மூதறிவாளன்.
      விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
      அது பதியாக அமருகின்றானே

      திருமந்திரத்தின் பத்தொன்பதாம் பாடல் இது.

      இறை வாழ்த்துடன் தன் பாயிரத்தைத் துவங்குவார்  திருமூலர்

 ஒன்று அவன்தானே எனினும் சக்தியுடன் சேர்ந்து அவன் இரண்டாயும்  இருப்பான் . அவன் கூற்றுடைத்தான் . ( இருளைப்போக்கினான் ) அவனை வணங்கி நான் என் இருளை அறியாமையை நீக்கபெற்றேன் அவனைப்போன்ற தெய்வம் இல்லை. அவனை அன்றி முத்தி பெறவும் வழி இல்லை.  அவனை நாடுபவரை தந்தையாகித் தாங்குவான்.  அவன் வெம்மையன் இருப்பினும் குளிர்ந்தவன்  அவன் வணங்கக்கூடியவர் எவரும் இல்லை. யாவுமாய் நிற்பவன் அவனே.

     முயற்சியும் பயனும் அவனே. மேகமும் அவனே. மழையும் அவனே. தொலைவிலும் அவனே. என் பக்கத்திலே எனக்கு உறு துணையாகவும் ஊக்கமளிப்பவனும் அளிக்கும் நந்தி தேவனும் அவனே. அவனே உள்ளவன் அவன் இலாத இடம் என்று ஒன்றும் இல்லை.

     அவன் எல்லாவற்றையுமே கடந்து நின்றான். அவன் சோதி ஆனவன்  அப்படிப்பட்ட ஈசனுடன் காதல் கொண்டோருக்கு இணை யாருமே இல்லை.

      அவன் வரம் தரும் வள்ளல்.

      இத்தனையும் வர்ணித்தபின் திருமூலர் சொல்லுவார்:

      அவன் இதுபதி.
      அதுபதி ஆக அமருகின்றானே.

      உலகத்தே இருக்கும் ஏழுவித வாசனைகளையும் துறந்து வடக்கே அவனைக் கண்டு தவம் இருக்கும் அடியார்கள் (மெய்த்தவம் செய்யும் அன்பர்கள்) மனதிலே தான் அவன் விளங்குகிறான் , வீற்றிருக்கிறான்.

     ஆக
     இது என்றால் வடக்கு.
     அது என்றால் தவம்.

      இது    கட அது     போம்.
 கட +அது இரண்டும் சேர்ந்து கடந்து
 போம்.
 அது ஆனது  போலும்.

, 'இறை' யானே  என உணர்ந்தது போம். ( போலும்.),  

      தான், தனது என்னும் எல்லாவற்றினையும் துறந்து தவம் செய்பவன் இறை உணர்கிறான்.
இறை என்பதை அழியா இயல்பு என்னும் வகையில் புரிந்து கொண்டாலும் வள்ளுவன் கூறுவாரே : இயல்பு ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய நிஜ உருவத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு கடந்து செல்லும் ஆற்றல் படைக்கும். .

     ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே
      பேரா இயற்கை தரும். ...   (குறள் 370)

      நிறையா இயல்புடைய ஒருவன் ஆசையை விடுவானே ஆயின், அது விட்ட அப்பொழுதே அழியா இயல்பை அடைந்து அது ஆகிறான்   ( மணக்குடவர் )

     இதுவும் கடந்து போம். 

(வலிந்து பொருள் சொல்வதாக் தோன்றினாலும் சரியான வழியே செல்கிறேன் எனவும் தோன்றுகிறது )


பிருஹத் ஆரண்யகத்திலும் இதுவே சொல்லப்படும்

ஒரு ஜீவாத்மா தன புற ஆவரனங்களைத் தவிர்த்து, அப்பால் தனக்குள்ள ஆசையையும் துறந்து, அக நிலைகளான மனம், புத்தி, இவையும் தான் இல்லை என உணர்ந்து, இது அது தான், நான் உண்மையிலே அவன்தான் இன்ற நிலைக்கு உந்தப்படுகிறானோ அவனே பரமாத்மா ஆகிறான்.
ஆகவே இது தனது வெளி நிலையினைக் கடந்து போகும்பொழுது அது இதுதான்  என உணர்கிறது. 
அத்வைத வாதத்தின் உட்கருத்தே இது அதுதான்.
நீ அவன் தான்.
உணர்ந்தவன் தன்னுள் சொல்கிறான்.
நான் அவனே. 
 
(வட மொழியில் பகர்கையில்
அஹம் பிரம்மாஸ்மி )


     
முடிப்பதற்கு முன் ஒரு நன்றி சொல்லவேண்டும்.

திரு தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு.  

உங்கள் பெயரில் உள்ள
 
 முதல் மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டால்,
 
தி. த. இ.
தியாகம்...... தவம்.......  இறை 


அதுவே இந்த கட்டுரையின் நிலை.