Pages

Thursday, September 30, 2010

இன்று மட்டும் அல்ல இனி எல்லா நாளுமே காந்தி பிறந்த நாள் !!!


இன்று மட்டும் அல்ல , இனி வருகின்ற எல்லா நாளுமே அண்ணல் காந்தி பிறந்த நாள் என மனதில் கொள்வோமா !!
என்னென்ன உணர்வுகள் மனதில் பொங்கும் ?

புதியதோர் உலகம் காண்போம் - மனச்
சக்திகள் களைவோம் மாசுகளை வெல்வோம் . =
புதியதோர் உலகம் காண்போம் .

நேரம் இது நல்ல நேரம்
நேசக்கரம் நீட்டி நல உறவு கொள்வோம்.
நேயமிகு சொற்கள் சொல்வோம் = நம்
நெஞ்சிலே கங்கை நீர் பெருகச் செய்வோம்.


புதியதோர் உலகம் காண்போம் = இப்

புவியனைத்தும் பூக்கள் இனி மலரச் செய்வோம்.
பெறுகின்ற தனங்கள் எல்லாம் - அவ்
விறைவனின் புகழெனவே சொல்லி மகிழ்வோம்.

அண்ணல் காந்தி அவர் அன்று சொன்ன
உண்மையும் அஹிம்சையும் உளமார கொள்வோம்.
அன்புசார் அறவழியில் அமைதி காண்போம் ,   இங்கு
ஆயிரம் இடர் வரினும் நேயமதை நீங்கோம்.

புதியதோர் உலகம் காண்போம்
கார்டூன் படம் நன்றி:  நாளிதழ். ஹிந்து

ரகுபதி ராகவா ராஜா ராம். பாடுவதற்கு ஒரு சரியான தருணம் இதுவே.
இசை உலகின் மா மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் அவர்களின் ஷெனாய் இசையை கேட்டு மகிழுங்கள். 





Sunday, September 19, 2010

நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

      சென்னையை அடுத்துள்ள திருனின்றவூர் அருகில் கசுவா என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம்  கடந்த பதினைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.   அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஏழை எளியவர்,  அனாதைகள், முதியோர் இவர்களுக்காக ஒரு இலவச பள்ளியும் ( ப்ளஸ் டூ வரை) , ஒரு மருத்துவ முகாமும்,  முதியவர்களுக்காக இடம், உணவு, உடை போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் மருத்துவ வசதியும் தருகிறது.

      இது பரவி இருக்கும் உலகின்  நல்ல உள்ளங்களால் பொருள் ஆதரவு தரப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்திற்கு    நாம் தரும் நன்கொடைக்கு வருவாய் வரியிலிருந்தும் ஐம்பது விழுக்காடு விலக்கு பெற ஒரு சான்றிதழ் தருகிறது.

      இவர்களின் தன்னலமற்ற தொண்டை பாராட்டுவோர் பலர், பொருள் உதவி செய்வோரும் பலர். 

      கடந்த சில ஆண்டுகளாக, 10ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களில் ஒரு சிலருக்கு மேற்படிப்பு,  தொழில் நுட்பம் மற்றும் மருத்துவ கல்விக்கான உதவியும் செய்யப்படுகிறது.

      இதன் மேல் விவரங்களை இங்கே காண்க.

      இப்பொழுது தலைப்புக்கு வருவோம்.

      அண்மையில், இவர்களிடமிருந்து எனக்கு மாதந்தோறும் வரும் பத்திரிகை   (  LOVE ALL SERVE ALL )
       ஏப்ரல் 2010    இதழில் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றல்ல, இரண்டினை ஒரு மன வருத்தத்துடன் குறிப்பிட்டு    இருக்கிறார்கள்.   அதன் சிற்றுரை இங்கே:

      இவர்கள் நடத்தும் முதியோர் இல்லத்தில் அனாதைகளும், மிகவும் வயதானவர்களுமே அனுமதிக்கப்படுவர்.
      என்னதான் உணவு, உடை, இருக்க இடம் இருப்பினும், அவ்வப்பொழுது மருத்துவ வசதிகளும் போதிய அளவிற்கு     இருந்தாலும்,  மனிதனின் வயதுக்கு ஒரு உச்ச வரம்பு இருக்கிறதல்லவா ?

      மிகவும் முதியவர்களில் அவ்வப்போது இறப்புகள் ஏற்படுவதும் இயற்கையாகவே இருக்கிறது.  இதற்கும் இந்த‌   நிறுவனம் ஆயத்தமாகி இருப்பதால், யார் இறந்தாலும், தங்களுடைய கோப்புகளை உடன் கவனித்து, அவர்களை  கொண்டு சேர்த்தவர்கள் சொந்தக்காரர், நண்பர் எவரேனும் இருப்பின் அவர்களுக்கு உடனடியாக தகவலைச்   சேர்த்து விடுகிறார்கள். 

       அது போலவே ஒரு இறப்பு  ஒரு நாள் காலை 11.30க்கு ஏற்பட, உடனேயே,   இறந்தவரது உற்ற்ம், சுற்றத்தாரின்  விலாசம், தொலைபேசி எண் இவற்றை தேடியதில், இறந்தவருக்கு சொந்தத்தில் பிள்ளையோ, பெண்ணோ இல்லை     எனினும் சில உறவினர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்தனர், எனத் தெரியவர , .  அவர்களுக்கு உடனடியாக தொலைபேசி    மூலமாகச் சொல்லியதுடன், நிறுவன ஊழியர் ஒருவரையும் அனுப்பி செய்தி சொல்லப்பட்டதாம். அவர்கள்  வருவதாக வாக்களித்திருந்தபோதிலும்,  மாலை நான்கு மணியான போதிலும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு  மணிக்கும் ஒரு அழைப்பு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் வருவதாகத் தெரியவில்லை. வந்து விடுகிறோம் என்றார்களே தவிர வருகிற வழியாய் காணோம்.
    இத்தனைக்கும் அவர்களது இருப்பிடத்திற்கு இந்த முதியவர் இல்லம் கால் நடையாய் நடந்தாலும் ஒரு சில நிமிட தூரத்தில் தான் இருக்கிறது . 

     இல்லத்தில் மற்ற முதியவர்கள் இருப்பதாலும், சவத்தை இராப்பொழுதுக்கும்  இல்லத்தில் வைத்திருப்பது சரியல்ல‌  என்பதால், ஈமக்கடன்களைச் செய்ய, நிறுவனத்தார் அந்த முதியோனின் உடலை, கிராமத்தின் வழியே எடுத்துச் சென்றபொழுது ,  அந்த உறவினர் ஏன் நாங்கள் வரும்வரை காத்திருக்கவில்லை என்று ஊழியர்களுடன் சண்டை     போட்டனராம். ஒரு ஐந்து நிமிட நேரத்தில் வரக்கூடியவர்கள் ஐந்து மணி காலத்திருகுப்பிறகும் வரவில்லை என்றால் என்ன காரணம் இருக்கக்கூடும்? அவர்கள் அந்த ஈமச்சடங்களுக்கு தங்களிடம் பணம் கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தின்   காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.  அதே சமயம், ஈமச்சடங்களுகளில் கலந்துகொள்ளவில்லை என்றால்,   உள்ளூர் வாசிகள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்தார்களோ என்னவோ ? 

      நிறுவனப் பத்திரிகை சொல்கிறது:  நாங்கள் தகவல் கொடுப்பது , உயிர் பிரிந்த ஆன்மாவுக்கான ஒரு மரியாதை   செய்யவே அன்றி , ஈமச்சடங்குகளுக்கான பணத்திற்காக அல்ல. 

       யாருமே வராத நிலையில், நிறுவன ஊழியர் ஒருவர் கடைசி காரியங்களை, இறந்தவரின் மகனாக தன்னை  நியமித்துக்கொண்டு, கருத்தாகச் செய்கிறார்.  அது மட்டுமல்ல, இறந்தவரது மதக்கோட்பாடுகளைக் கவனித்து    அதன் படியே செய்கிறோம் என்றும் சொல்கிறார்கள். 

      இந்த நிகழ்வினை ஒரு மன வருத்தத்துடன் எழுதியிருக்கிறார்கள் அந்த இதழின்   ஆசிரியர் எனது அக்கால முதல்  நண்பர்.  இப்பொழுது அவருக்கு 75 வயதிருக்கலாம். 

      'நாம் இவ்வளவு செய்கிறோமே !  யாருக்காக செய்கிறோமோ , அவர்கள் உறவினர்கள், அல்லது சுற்றத்தார்  போற்றவேண்டும் என எதிர்பார்ப்புடன் செய்யவில்லை. இருந்தாலும் தூற்றாமல, சண்டை போடாமல் இருக்கலாமே !!'

      என்ற ஆதங்கம் இவரது எழுத்தில் தெரிகிறது.

      அவருக்கு ஒரு சிறிய செய்தி சொல்ல அவாவுற்றேன்.

      அவருக்குத் தெரியாத வள்ளுவம் இல்லை.   உண்மையிலே அவரது பள்ளியின் கொள்கைகளும், கோட்பாடுகளுமே  மனித நேய வழியில் அமைந்தவை.  வள்ளுவர், அண்ணல் காந்தி, பாரதி, விவேகானந்தர் இவர்களின் வழிகாட்டுதலில்
இயங்குகிறது இ ந் நிறுவனம்( www. sevalaya. org )

       இருப்பினும் ஒரு குறள் மேற்கோள் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

       ஒருவர் செய்த உதவியை நாம் எக்காலத்தும் மறப்பது நன்றன்று.  அது அறிந்ததே .
       இரண்டாவதாக, நன்று அல்லது எதுவோ அதை அன்றே மறப்பது நன்று.

       மனித வாழ்வியலில்  ethics      என்ன  என்பதை ஒரு ஒண்ணே முக்கால் அடியில் தருகிறார் வள்ளுவப்பெருந்தகை.

       நன்றி மறப்பது நன்றன்று   =   நன்றல்லது
       அன்றே மறப்பது நன்று.

      மக்களுக்குத் தொண்டு செய்யும்பொழுது,  அதை நாம் செய்கிறோம் என்ற எண்ணம் வரும்பொழுது தான்  உண்மையான, தன்னலமற்ற தொண்டிற்குக் கூட நன்றி இல்லையே என வருத்தம் மேலிடுகிறது.

      தொண்டை நான் செய்யவேண்டும் என்பது இறைவன் விதித்த கட்டளை.  அதை நான் நிறைவேற்றுகின்றேன்.  இன்று நான்/ நாம் செய்கின்ற பணிகள் உதவிகள் எல்லாமே நாம் செய்வதல்ல.இவை அனைத்துமே ஆண்டவன் செய்வது. நான் ஒரு மீடியம் அல்லது கருவி என்ற மனப் பாங்கு வரின் இந்த வருத்தம் மேலோங்கிடாதோ ?

      கீதையிலும் இதுதான் சொல்லப்படுவதாக சொல்கிறார்கள்.
      நடப்பன எல்லாமே நடக்கும். நடந்தே தீரும்.
      நாம் ஒரு சாட்சிதான்.
      நம்மால் எதும நடக்கவில்லை. நாமும் ஏதும் செய்வதில்லை. 
     நாம் ஒரு கருவிதான்.
      இறைவன் நம் பெயரிலே செய்கிறான்.
      அவனை வாழ்த்துவோம்.வணங்குவோம்.
   இவர்கள் தம்  நற்பணிகளை தொடர்ந்து சோர்விலாது தொய்விலாது  செய்ய இந்த நிறுவனத்திற்கு வித்திட்ட இறைவன் என்றும் அருள் புரிவான்.அது அவன் செயல் .



Friday, September 10, 2010

தமிழ் மறைகள் வழி காட்டும் விநாயக வழிபாட்டு முறை 11 September 2010

முழுமுதற் கடவுளாம் விநாயகப்பெருமானை துதிக்காத பண்டைய தமிழ்ப் புலவர்கள் இல்லை எனச் சொன்னால் மிகையாகுமோ? . மனித வாழ்விலே ஏற்படும் இன்னல்கள்,  இடையூறுகள் எல்லாவற்றையும் களைந்து நம் வினைப்பயன்கள் அறுத்து நம் யாவரையும் உய்வித்து நல்வழிப்படுத்தும்  விநாயகன், கணபதி, பிள்ளையார் எனப் பலவிதமாக பெயர் சூடிக்கொண்டு ஒவ்வொரு தெருக்கோடியிலும் அமர்ந்து ஆட்சி புரியும் யானை முகத்தோனை புகழ் பாடும் தமிழ் பாடல்களைக் காண்க. யானை முகத்தோனுக்கு பேழை வயிரனுக்கு தமிழில் அர்ச்சனை ( வழிபாடு ) இப்பதிவின் இறுதியில் காண்க. விநாயகனை வீர கணபதியை விநாயக சதுர்த்தி அன்று இருபத்தி ஆறு வகை பூக்களாலும் இலைகளாலும் பூசிக்கலாம். 


தல புராணம்
    எழுத்தும் சொல்லும் பொருளும் இணக்குற
        வழுத்துஞ் சீர்செயந்திப்பதி மானியம்
    விழுந்தகு ந்தமிழாற் சொல் வேதமே
        பழுத்த குஞ்சரன் பாதங்கள் போற்றுவோம்.

     முருகன் அடியார்:
      தும்பி முகத்தோனே ! துணையாய் வந்தெனக்குத்
           தம்பியின் புகழதுவே தளர்வின்ட்றிப்பாடிடவே
       நம்பியேன் பணிந்திட்டேன் ! நலமாக அருள் தந்து
            வம்பெதும் வாராது வழியளித்துக் காத்திடுவாய் !!

      காணாபத்யம்
      ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
       இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
       நந்தி மகன் தனை ஞானக்கொழுந்தினைப்
       புந்தியில் வைத்து போற்றுகின்றேனே  ...    திருமூலர்.

     வாரணத்தனை அயனை விண்ணோரை மலர்க்கரத்து
              மகத்துவென்  றேன்மைந்தனைத்துவஜ‌
               த்துணை நயந்தானை வயல் அருணை
               த்திறை கொண்ட யானையை வாழ்த்துவனே ... கந்தரந்தாதி.

கந்தர் அனுபூதி
    நெஞ்சக்கனகல்லு நெகிந்துருகத்
        தஞ்சத்தருள்ஷண்முகனுக் கியல்சேர்
     செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
        பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.     ....   

    புண்ணியம் கோடி வரும் பொய்வாழ்க்கை ஓடிவிடும்
        எண்ணியது கைகூடும் ஏற்ற துணை நண்ணிடவே
    வாழ்வில் வளர் ஒளியாம் வள்ளல் வி நாயகனை
        நாளெல்லாம் வாழ்த்திடுவோம் நன்று   ..  பெருந்தேவனார்.

    கணபதி என்றிடக்  கலங்கும் வல்வினை
    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
    கணபதி என்றிடக் கருமம் இல்லையே     ...   திருமூலர்


    வானுலகும் மண்ணுலகும் வாழ்மறை வாழப்
    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
     ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வாய்
      ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.   ...சேக்கிழார் புராணம்

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
    கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
     பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
     பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம் .   ...விருத்தாசல புராணம்.

     சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர‌
     முத்தி யான முதலைத் துதிசெயச்
      சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ‌
      சித்தியானை தன் செய்ய பொற்பாதமே      ...  திருவிளையாடற் புராணம். 

 வி நாயகரைப் பூசிக்க உரிய பத்திர புஷ்பங்கள்.

    மேற்கு மாசிப்பச்சை நதுங்கை யாந்தகரை
    வில்வமுடன் ஊமத்தை நொச்சி நாயுருவி
    யேதமில் கத்தரி வன்னி அலரி காட்டாத்தி
    யெருக்கு மருதுடன் மால்பேரி யம்புகாந்தி
    மாதுளையே உயர்தேவதாரும் அரு நெல்லி
    மன்னு சிறு சண்பகமே கெந்தளி பாதரியே
    ஓதரி யவ நுகு இவையோர் இருபத்தொன்று
     முயர்வி நாயக சதுர்த்திக் குரைத்த திருபத்திரமே. 






Wednesday, September 08, 2010

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி ...விநாயகர் அகவல் ..அவ்வையார் இயற்றியது





பாடுவது சுப்பு இரத்தின தாத்தா ஒரு ராக மாலிகை இது.
துவக்கம் கானடா . அடுத்து சாரங்க  முன்றாவதாக ஷண்முக பிரியா கடைசியில் மத்யமாவதி ராகம்.

பெருமைக்குரிய திரு சீர்காழி கோவிந்தராசன் பாடுவது இங்கே 
.விநாயகர் அகவல் ..அவ்வையார் இயற்றியது

 சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!


விநாயகர் அகவல் பிறந்த கதை
"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவலைச் சீர்காழி    கோவிந்தராஜன் பாடக் கேட்டிருப்பீர்கள். தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது.

திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.

இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்.

"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் அவ்வையார்.

"ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் அவ்வை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.
நன்றி  :
http://panippulam.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=144&Itemid=388



வன்னி மரத்தடி விநாயகனை  போற்றி  போற்றி என நூற்றி எட்டு நாமங்களால்
போற்றி பூசிக்கும் முறை விநாயகன் சதுர்த்தி ஆன 11.09.2010 
அன்று வெளியிடப்படும். 

Wednesday, September 01, 2010

தொண்டரடி பொடி ஆழ்வார் இயற்றிய பிரபந்தம்



பாம்பே ஜெய ஸ்ரீ பாடுகிறார்கள்.
மேலே பாடப்படுவது இரண்டாவது பாசுரம்.
ஸ்ரீ தொண்டரடிப் பொடிகள் அருளிச்செய்த
திவ்யப் பிரபந்தம் (5/14)
(அமைப்பு: தமிழ் ஆர்ட்ஸ் அகெடமி)
   
பதிகம் = 1/2 : திருமாலை   
பதிகம் : 1 மொத்தம் : 2

01. திருமாலை
02. திருப்பள்ளி எழுச்சி
   
காவலிற் புலனை வைத்து, கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட்டு உழிதர்கின்றோம் நமந்தமர் தலைகள் மீதே;
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய், அரங்க மா நகருளானே!
    1
பச்சை மா மலை போல் மேனி, பவளவாய், கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்
இச் சுவை தவிர, யான் போய் இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகருளானே!
    2
வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்,
பாதியும் உறங்கிப் போகும்; நின்றகிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும்; பிணி பசி மூப்புத் துன்பம்;
ஆதலால், பிறவி வேண்டேன்; அரங்க மா நகருளானே!
    3
மொய்த்த வல்வினையுள் நின்று, மூன்று எழுத்து உடைய பேரால்
கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்;
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனைப் பெற்றும், அந்தோ! பிறவியுள் பிணங்குமாறே.
    4
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு,
உண்டு இராக் கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து,
தண் துழாய்-மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே!
    5
மறம் சுவர் மதில் எடுத்து, மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்;
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே,
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து புள் கௌளவக் கிடக்கின்றீரே.
    6
புலை-அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன், சத்தியம், காண்மின் ஐயா!
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்.
    7
வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில், போவதே நோயது ஆகி;
குறிப்பு எனக்கு அடையும் ஆகில், கூடுமேல், தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய், அரங்க மா நகருளானே!
    8
மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள்!
உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்;
அற்றம் மேல் ஒன்று அறியீர்; அவன் அல்லால் தெய்வம் இல்லை;
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே.
    9
நாட்டினான் தெய்வம் எங்கும்; நல்லது ஓர் அருள்தன்னால்
காட்டினான் திருவரங்கம், உய்பவர்க்கு உய்யும் வண்ணம்;
கேட்டீரே நம்பிமீர்காள்! கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே!
    10
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து, உலகங்கள் உய்யச்
செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதில்-திருவரங்கம் என்னா,
கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே.
    11
நமனும் முற்கலனும் பேச, நரகில் நின்றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி;
அவனது ஊர் அரங்கம் என்னாது, அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார்: என்று அதனுக்கே கவல்கின்றேனே.
    12
எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்,
வெற்கொள் பூந்துளவ மாலை விண்ணவர்கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம், அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே.
    13
வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோன் அமரும் சோலை, அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே.
    14
மெய்யர்க்கே மெய்யன் ஆகும், விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்; புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்; அழகன் ஊர் அரங்கம் அன்றே.
    15
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்,
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே.
    16
விரும்பி நின்று ஏத்த மாட்டேன், விதி இலேன், மதி ஒன்று இல்லை;
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை-இறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு, என் கண்ணினை களிக்குமாறே!
    17
இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக்கண்ணன் எம்மான்:
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனி-அரும்பு உதிருமாலோ! என் செய்கேன், பாவியேனே?
    18
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தெந்திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே?
    19
பாயும் நீர் அரங்கந் தன்னுள் பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும் மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே?
    20
பணிவினால் மனமது ஒன்றிப் பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்:
அணியின் ஆர் செம்பொன் ஆய அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே?
    21
பேசிற்றே பேசல் அல்லால், பெருமை ஒன்று உணரல் ஆகாது;
ஆசற்றார் தங்கட்கு அல்லால், அறியல் ஆவானும் அல்லன்;
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்,
பேசத்தான் ஆவது உண்டோ ? பேதை நெஞ்சே! நீ சொல்லாய்.
    22
கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன், ஏழையேனே!
    23
வெள்ள-நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கந் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே! வலியை போலும்! ஒருவன் என்று உணர மாட்டாய்;
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே!
    24
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன், என்கண் இல்லை; நின்கணும் பத்தன் அல்லேன்;
களிப்பது என் கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன்;
அளித்து எனக்கு அருள்செய், கண்டாய், அரங்க மா நகருளானே!
    25
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்;
தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்;
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்; அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு; எல்லே! என் செய்வான் தோன்றினேனே?
    26
குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்;
மரங்கள் போல் வலிய நெஞ்சு வஞ்சனேன், நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே.
    27
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார், ஆனைக்கு ஆகிச்
செம் புலால் உண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்;
நம் பரம் ஆயது உண்டே? நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே.
    28
ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை;
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!
காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்;
ஆர் உளர் களைகண்? அம்மா! அரங்க மா நகருளானே!
    29
மனத்தில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை;
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்; வாளா
புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா!
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே!
    30
தவத்துளார் தம்மில் அல்லேன்; தனம் படைத்தாரில் அல்லேன்;
உவர்த்த நீர் போல எந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்;
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கு அறத் துரிசன் ஆனேன்;
அவத்தமே பிறவி தந்தாய், அரங்க மா நகருளானே!
    31
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திரு அரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனைய மேனிக் கண்ணனே! உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன்: மூர்க்கனேன், மூர்க்கனேனே.
    32
மெய் எல்லாம் போக விட்டு, விரிகுழலாரிற் பட்டுப்
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்
ஐயனே! அரங்கனே! உன் அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன்: பொய்யனேன், பொய்யனேனே.
    33
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே.
    34
தாவி அன்று உலகம் எல்லாம் தலைவிளாக்கொண்ட எந்தாய்!
சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண் மாலே!
ஆவியே! அமுதே! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்!
பாவியேன் உன்னை அல்லால்; பாவியேன், பாவியேனே.
    35
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே! மதுர ஆறே!
உழைக் கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு, என்னை நோக்காது ஒழிவதே! உன்னை யன்றே
அழைக்கின்றேன், ஆதிமூர்த்தி! அரங்க நகருளானே!
    36
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஒர் அருளும் அன்றே என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார், அம்மவோ! கொடியவாறே!
    37
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஒர் அருளும் அன்றே என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார், அம்மவோ! கொடியவாறே!
    37
மேம் பொருள் போக விட்டு, மெய்ம்மையை மிக உணர்ந்து,
ஆம் பரிசு அறிந்துகொண்டு, ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பு அறத் தலை சிரைத்து, உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும்; சூழ் புனல் அரங்கத்தானே!
    38
அடிமையிற் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்! மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்; அரங்க மா நகருளானே!
    39
திருமறுமார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில், மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்; அரங்க மா நகருளானே!
    40
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில்,
தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பர் ஆகில்,
ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே.
    41
பழுது இலா ஒழுகல்-அற்றுப் பல சதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில்,
தொழுமின் நீர், கொடுமின், கொண்மின், என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல்; மதில்-திருவரங்கத்தானே!
    42
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களிற் தலைவராய சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில், நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்; அரங்க மா நகருளானே!
    43
பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண் இலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப,
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா! உன்னை என்னோ? களைகணாக் கருதுமாறே!
    44
வள எழும் தவள மாட மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க-மாலைத்
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே!
திருமாலை முற்றும்.
.........................

Song : Pachai Mamalaipol (Divya prabhandam)
Artist : Bombay Jayashri
Composer : Thondaradipodi Aazhwar