Pages

Saturday, February 09, 2008

ஈதல் என்றால் என்ன ?



ஈதல் என்றால் என்ன ?
பலர் பல்வேறு விதமாக விளக்கம் அளித்துள்ளனர்.
வள்ளுவர்
"ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு " எனச் சொல்லி
ஒருவன் வாழும் காலத்தே புகழ் பட வாழ நினைப்பின்
ஈதல் ஒன்றே அவன் செய்யவேண்டிய கருமம் என்றார். எதைச் செய்யினும் நமக்குச்
செய்வதனால் என்ன கிடைக்கும் என்று நினைக்கின்ற கால கட்டத்தில் பலர் நம்மிடையே இருப்பது
வெள்ளிடை மலை. தான் சம்பாதிப்பது, தனக்கும் தன் குடும்பத்தாருக்குமே போதாத நிலையில் என்ன தான தருமம்
செய்வது என நினைப்பவரும் உள்ளர். அது ஒரு வகை. தான் செலவழித்தது போக, மிச்சத்தை மற்றவருக்கு தருவது தருமம் செய்வது அடுத்த வகை. தனக்கு எந்த விதத்திலும் உபயோகமில்லாது போன வற்றை மற்றவருக்குத் தந்து
தானம் செய்தேன் தருமம் செய்தேன் என்று சொல்பவர் இன்னொரு வகை. இவை எல்லாவற்றினையுமே நியாயப்படுத்திப் பேச இயலும்.

ஆனால், ஈதல் என்னும் பொருளினை மற்றோர் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறார் அறனெறிச்சாரம் இயற்றிய முனைப்பாடியார் . இவர் சமண சமயத்தினைச் சார்ந்திருந்த போதிலும் சமய வெறுப்பு இல்லாதவர். இப்புலவர்
"ஈதலை" தலை, இடை, கடை என மூன்றாக வகுத்துள்ளார்.

கொடுப்பவன் பணிந்து கொடுக்கவேண்டும். தனக்கு கொடுப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்ற நினைப்புடன்
ஈயவேண்டும். அப்படி ஈயும்போது, அதை வாங்கிக் கொள்பவர் அதற்கான தகுதி உடைத்தாரா என்றறிந்து தருமம் செய்யவேண்டும். அவ்வாறு, கொடுப்போரும் பெறுவோரும் பணிவுடனே இருக்கையிலே அதனை தலையான தருமம் எனச் சொல்கிறார்.

பணிவு இல்லாதவர் ஆணவத்துடன், தான் கொடுக்கிறோம் என்ற நினைப்புடனே, தனக்கு அடங்கியவருக்கு தருவது இடை நிலை தருமம் ஆகும். ஆங்கிலத்தில் இதை the beggar has no choices
என்றும் சொல்வார்கள். பெறுபவன் கொடுப்பவனுக்குத் தகுதி இருக்கிறதா எனக்கவனித்துப் பின் பெறுவது
அசாத்தியம். ஏதோ கிடைக்கிறதே என்று ஆண்டவனுக்கும் கொடுத்தவனுக்கும் நன்றி சொல்லி விட்டு செல்லுதல் இயற்கை. இந்த வகைதனை இடை நிலை தருமம் எனச் சொல்கிறார் புலவர் பெருமான்.

மூன்றாவது நிலை. பணிவற்றவன், ஆணவ, அகங்காரத்துடன், தான் தான் கொடுக்கிறேன் என்ற இறுமாப்புடன்,
ஊர் எல்லாம் பறை சாற்றிக் கொடுப்பதும், அவற்றைப் பெறுபவர், இவன் என்ன கொடுத்துவிட்டான் என இகழ்ச்சியுடன் எண்ணத்தோடு செயல்படுவதும், மூன்றாவது கடை நிலை தருமமாகும். இந்தக் காட்சி எப்படி
இருக்கின்றது என்றால், தோலால் செய்த இரு பொம்மைகள் நாடக அரங்கிலே போர் புரிவது போலாகும்.

இப்பொழுது பாட்டினைக் கேட்போமா?

அடங்கி அங்கினார்க்கு ஈதல் தலையே அடங்காது
அடங்கினார்க்கு ஈதல் இடையே = நுடங்கு இடையாய்!
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அ:து என்ப‌
தோற்பாவைக் கூத்தினுள் போர்.

ஆக, பண்பு என்ன? தருமம் செய்யும்போது வினயம் வேண்டும்.

தருமம் செய்தவர், இந்த தருமத்திற்கு எனக்கு என்ன பிரதி பலன் கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் ஒரு இடை நிலை தான். ஈக. ஈன்றவுடன் அதை மறப்பது மிகவும் நல்லது. இவனுக்கு இன்ன செய்தோம், பார் ! நம்மை ஒரு தடவை கூட நன்றி உணர்வோடு பார்க்கிறானா பார் ! என்று நினைத்திடல் கூட பண்பு அல்ல என்றே தோன்றுகிறது.

ஓளவையார் கூறுவார்:

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந நன்றி
என்று தருங்கொல் என வேண்டா.. நின்று
தளரா வள்ர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்.

நல்ல குணமுடைய ஒருவனுக்கு செய்யப்பட்ட உபகாரம் உறுதியாக நிலைத்து நிற்கும். ஐயம் வேண்டாம்.
நாம் வைத்த தென்னங்கன்று மரமாகி இனிக்கும் இள நீர் தரும் என்பது திண்ணம். ஆனால் அது தனக்கு
கிடைத்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலை தவிர்ப்பது நல்லது.

இத்தகைய மாண்பு படைத்த மனிதர் தனக்கென வாழா பிறர்க்கென வாழ்கின்றபடியால், அவர் இசை பட‌
வாழ்கிறார், புகழ் அவரைத் தாமாகவே வந்தடைகிறது.