Pages

Wednesday, September 08, 2010

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி ...விநாயகர் அகவல் ..அவ்வையார் இயற்றியது





பாடுவது சுப்பு இரத்தின தாத்தா ஒரு ராக மாலிகை இது.
துவக்கம் கானடா . அடுத்து சாரங்க  முன்றாவதாக ஷண்முக பிரியா கடைசியில் மத்யமாவதி ராகம்.

பெருமைக்குரிய திரு சீர்காழி கோவிந்தராசன் பாடுவது இங்கே 
.விநாயகர் அகவல் ..அவ்வையார் இயற்றியது

 சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!


விநாயகர் அகவல் பிறந்த கதை
"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவலைச் சீர்காழி    கோவிந்தராஜன் பாடக் கேட்டிருப்பீர்கள். தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது.

திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.

இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்.

"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் அவ்வையார்.

"ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் அவ்வை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.
நன்றி  :
http://panippulam.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=144&Itemid=388



வன்னி மரத்தடி விநாயகனை  போற்றி  போற்றி என நூற்றி எட்டு நாமங்களால்
போற்றி பூசிக்கும் முறை விநாயகன் சதுர்த்தி ஆன 11.09.2010 
அன்று வெளியிடப்படும். 

1 comment:

  1. தாத்தா அருமை.பக்திப் பரவசமாய் உணர்ந்து அனுபவித்தேன்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி