Pages

Friday, July 03, 2009

ஆண்டவன் எழுதிய எழுத்து


ஆண்டவன் எழுதிய எழுத்து
இரு நூறு வருடங்களுக்கு முன்பே ஜெஃபர்ஸன் அவர்களுக்கு அவரது நண்பர் ராபர்ட் பேட்டர்சன்(கணிதப் பேராசிரியர், பென்சில்வேனியா பல்கலைக்கழகம்) அனுப்பிய ஒரு தகவல் அடங்கிய ரகசிய மடல் இன்னமும் இன்னது என புரியாமல் இருந்தது, தற்பொழுது அதன் ரகசியப்பேழை எண்கள் பற்றிய விவரம்
கண்டுபிடிக்கப்பட்டு, மிகப்பெரிய செய்தியாக பேசப்படுகிறது. இந்த ரகசியத்தை உடைப்பது அவ்வளவு எளிதான
காரியம் அல்ல. ஒவ்வொரு எண் அல்லது எழுத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கும். அது இடத்திற்குத்தகுந்தாற்போலவும்
மாறிவிடும். அது அதை எழுதியவர்க்கும் அதை உரியவர்க்கும் மட்டுமே புரியும். இது பற்றி சுவையான தகவல்
அறிய இங்கே செல்லவும். (What is CRYPTOGRAPHY? )
http://online.wsj.com/article/SB124648494429082661.html#mod=whats_news_free?mod=igoogle_wsj_gadgv1


நிற்க.
நமது வீடுகளில் இன்னும் 'க' ந சங்கேத பேச்சு பிரபலம். கசி கனி கமா கவு கக் ககு கபோ கக கலா கமா என்றால் சினிமாவுக்கு ப் போகலாமா ? வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கோ அல்லது வீட்டில் உள்ளவருக்குக் கூட புரியாத, தமக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் பேசிக்கொள்வது கணவன் மனைவி மார்களுக்குக் கை வந்த கலை ஆகும்.

உதாரணமாக,

வந்திருக்கும் விருந்தினர்களிடையே அல்லது கணவன் வீட்டு உறவினர்களிடையே
கணவன் இடைவிடாது பேசிக்கொண்டே இருக்கிறார். மனைவிக்கு அது பிடிக்கவில்லை.
என்ன அப்படி வாய் ஓயாம பேசுறாரு ? இருந்தாலும் அத்தனை பேர் மத்தியிலே
என்னங்க பேசிக்கிட்டே இருக்கீங்க..கொஞ்சம் வாய் மூடிட்டு இருங்களே ! அப்படி
சொல்ல முடியுமோ ? !!! முடியாது தானே !!
ஆனால் எப்படி சொல்கிறாள் பாருங்கள்:
வாசற்கதவை திறந்தே வச்சுருக்கீகளே !!
கணவனுக்குப் புரிகிறது. கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பிக்கிறார்.

இன்னும் ஒரு உதாரணம்.
க ந பாஷை.
உதாரணமாக:

கது கள கசி கத கல கம் கவ கலை கப கதி கவு கதா கன் கஎ கன கக் ககு கபி கடி கக் ககு கம்.கஏ கனெ கனி கன்
கஅ கது களி கய கத கமி கழி கல் க இ கரு கக் ககி கற கது.
க வை நீக்கிவிடுங்கள். உடனடியாகப் புரிந்துவிடுகிறது

துளசிதலம் வலை பதிவு தான் எனக்குப் பிடிக்கும். ஏனெனின் அது எளிய தமிழில் இருக்கிறது.


இதையே அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். முதல் வரி மட்டும்.

கது காள கிசி கீத குல கூம் கெவ கேலை கைப கொதி கோவு கெளதா கெளன் கோஎ கொன கைக் கேகு
கெபி கூடி குக் காகு கம்.

இதன் இரண்டாவது பகுதி முதற்பகுதியின் வரும் வழி.

இருந்தாலும் இந்த வரியில் காணப்படும் வார்த்தைகளின் முதல் எழுத்தை நீக்கிவிட்டால் உடன் செய்தி
கிடைத்துவிடுகிறது.

ஆனால், சங்கேத மொழி அவ்வளவு எளிதில் அறியக்கூடியதோ அல்லது ஆக்கப்படுவதோ அல்ல. இன்னமும்
சற்று கடினமாக்கப்படுகிறது. எண்கள் புகுத்தப்படுகின்றன. அந்த எண் ஒரு பாஸ் வேர்டு போல . அதை
சரியாக உபயோகிக்கும்பொழுது தான் செய்தி தெரிய வரும்.

இப்போது இதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
துளசிதளம் வலை பதிவு எளிய தமிழில் இருக்கிறது.
இதை எப்படி மாற்றலாம் ?
1த4ள1ச30த்1ள்1ம்00 2வ்1ல்9 3ப்1த்3வ்5000 4எள்3ய்10000 5த்1ம்3ழில்00000 6இர்3க்க்3ற்1த்300000.
இதில் முதல் எண், வரியில் இவ்வார்த்தை இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. அடுத்த எழுத்துக்கள் மெய் எழுத்து
வரிசையின் இடத்தில் காணப்படும் எழுத்து. உதாரணமாக , த4 என்பது து.
முதல் எண், வரியிலே இவ்வார்த்தை இருக்கும் இடத்தைக் குறிப்பது என்று சொன்னவுடனே, இந்தக்குறியீட்டை எப்படியும் மாற்றலாம்.

இதை ஆக்குவது கடினமல்ல. இதை ஒரு கணினி வழியாக ப்ரொக்ராம் செய்து விடலாம். அது எந்த கோப்பில் இருக்கிறது என்கிற தகவலையும் உள்ளடக்கலாம்.

அது சரி ! இதெல்லாம் எழுதுவதற்குள் போதும் போதும் என்று ஆகி உடம்பு வியர்த்துப்போயிடுமே !
அதற்குப் பதிலாக யாருக்கு எழுதுகிறோமோ அவருக்கே ஒரு ஃபோன் போட்டு சொல்லிவிடலாமே என்று
கேட்கிறீர்கள். சரிதான்.
ஆனால், உங்கள் தகவல், இன்னமும் ஒரு 200 வருடங்களுக்குப் பிறகு வரும் உங்கள் கொள்ளுப்பேரர்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என நீங்கள் விரும்பினால் ?

மற்றும், குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தெரியவேண்டும் என நீங்கள் நினைக்கும்போதும் இதுபோன்ற‌
சங்கேத மொழிகள் பயன்படும்.

இதெல்லாம் இருக்கட்டும். ரகசிய மொழிகள், சங்கேதக்குறிப்புகள் இவற்றையெல்லாம் படித்து நாம்
என்ன செய்யப்போகிறோம். இந்த எழுத்துக்கள் என்னவாயிருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன
என நம்மில் பலர் நொந்துகொள்ளாமல் இல்லை.

உண்மைதான். எந்த ஒரு லிபி அதாவது எழுத்தையும் டி கோட் செய்துவிடலாம். ஆண்டவன் எழுதிய‌
தலை எழுத்தை மட்டும் முன்னமேயே டி கோட் செய்து அறிய இயலாது.
என்னதான் ஜாதகம், எண் கணிதம்,கை ரேகை சாத்திரம், நாடி ஜோசியம், குறி பார்த்தல் ஆகியவை இருந்தாலும் அவற்றின் வரம்பு
ஒன்று இருக்கிறது.

ஆண்டவன் எழுதிய எழுத்து அந்த வரம்புகட்குமேல் அப்பாற்பட்டது. அவ்வெழுத்து அவரவர் செய்த‌
அறன்பால் உடைத்து.
அதனால் தானோ என்னவோ வள்ளுவர் எழுதினார்:

அறத்து ஆறு இது என வேண்டா , சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

1 comment:

  1. ஆஹா..... மீனாட்சி அக்கா.

    ஆண்டவன் எழுதுனதை அறியமுடியலையேக்கா. அழிச்சு எழுதவும் முடியாதேக்கா. அவனாலேயே மாத்தி எழுத முடியாதாமே..... எங்க பாட்டி புலம்பிக்கிட்டே இருந்தாங்க.

    தலை எழுத்து எல்லாத்தையும் எழுதுனவன் தலையிலேயே போட்டுட்டால் நமக்கு பாரம் கம்மி:-)

    'க' ன பாஷையை விட ஐனா பாஷை சுலபமாப் பேசவருமேக்கா.

    துய்னுளசி தைனளம் எய்னெனக்கு பிய்னுடிக்குய்னுது. எய்னெளிய தைனமிய்னிழ் இய்னிருக்கிய்னிருது


    ஆனாலும் உதா'ரணத்திற்கு'த் துளசி தளத்தை எடுத்தது எய்னெனிக்குப் பெய்னெருமையா இய்னிருக்குது அய்னக்கா.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி