Pages

Monday, October 31, 2011

சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்

"சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்" 

எனது அதிருஷ்டம் 

கந்த சட்டி நாளை. 1 NOVEMBER 2011.

திருத்தலங்கள் அறுபடை வீடுகள் எல்லா இடத்திலும் லட்சக்கணக்கான பக்தர் கூட்டம் அலை மோதும் கணக்கில்லா காவடிகள் சிந்து பாடும்.  நானோ என் வீட்டில் இருந்தபடியே அந்த குமரனை, கந்தனை, குகனை, கார்த்திகேயனை, வேலனை வணங்கி அவன் அருள் பெற வேண்டும். என் செய்வேன் !!   முருகா ! எனக்கூவினேன்.

எதேச்சையாக எனது கையில் என்றோ 1999  ல் பம்பை நகரத்தார் பதிப்பித்த புத்தகம் கார்த்திகேயன் பாமாலை கிடைத்தது.  அதில் கிடைத்ததோ ஒரு பொக்கிஷம். 
கந்தன், கார்த்திகேயன்,குமரன்,  மால் மருகன், குகன், ஷண்முகன், , சுவாமிநாதன், தண்டபாணி, வேலன், வேலாயுதன் என ஆறு படையோனை எந்த விதமாக அழைத்தாலும் அந்த தமிழ்த் தெய்வம் முருகன் , முருகனே !! அந்தமுருகனை, பழனி முருகனை கவிஞர்  மருதகாசி வணங்கும், வர்ணிக்கும் கலைதான் என்னே!! அவர் எழுதிய ஒரு பாடல் சிப்பிக்குள் முத்தாய்.


அவர் பாடிபுகழ் அடைந்தது கலைத் துறையான சினிமாத் துறையில். நாலாயிரத்துக்கும் மேலாக அவர் பாடியிருக்கிறார். அவரது பாடல்கள் காலனையும் காலத்தையும் வென்று நிற்கிறது.  மாசிலா உண்மைக் காதலே என்று பாடியவர், மாறாத காதல் கொண்டது அந்த வள்ளிக்கணவன் செந்தில் ஆண்டவன் திருக்குமரன் கந்தன் வேலன் குமரன் அவனிடம்தான். 
இந்தப் பாடலை கண்ட வினா முதல் பாடிக்கொண்டே இருக்கிறேன். இதில் உள்ள பொருள் நயம், எதுகை மோனை சொல்லிற்கு அப்பாற்பட்டது.  இதை அந்த சுந்தரனே சுவாமிநாதனே ஷண்முகனே எழுதியதோ என்றும் தோன்றியது.

ஆஹா !! படியுங்கள். ரசியுங்கள். !!!

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்துவரச்
   செந்தில்வளர் கந்தனுமே கொலுவிருக்க‌
  நங்கைமலர் தெய்வயானை வள்ளியுடன்
  நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்.

   தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்கத்
   தென் பழனி வலம் வரும் தங்க ரதமாம்
     தங்கரத மீதமர்ந்து கொலுவிருக்கும்
    தண்டபாணித் தெய்வமே சரணமய்யா

    பன்னீரும் சந்தனமும் பாற்குடமும்
    பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
    கொஞ்சுதமிழ் பாலகனுக்கு பழ நியிலே
    கோடிக்கண்கள் வேணுமய்யா காண்பதற்கே

 
    காவடிகள் உன்னைத்தேடி ஆடிவரும்
    கால் நடையாய்ப் பக்தர் கூட்டம் கோடிவரும்
    சேவடியெ சரணமென வாழ்பவர்க்கே
    செல்வ நலம் தந்தருளும் கந்தவேளே

சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில்வளாற் கந்தனிடம் தூதுவிடுத்தேன்
கந்தமிகு குகன் நெஞ்சில் இடம் பிடித்தேன்
ஆறுமுகன் பேரழகைப் படம் பிடித்தேன்.

வண்ணமயில் வாகனத்தில் வேல் முருகன்
வள்ளிதெய்வ யானையுடன் மால்முருகன்
தென்னகத்தில் வாழுகின்ற சிலையழகன்
என்னகத்தில் காட்சி தந்தான் கலையழகன்.

வெண்ணீரு நெற்றியிலே பளபளக்க‌
வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க‌
பன்னீரும் மார்பினிலே கம கமக்க‌
பார்வதியின் பாலன்வந்தான் மனம் களிக்க.

ஓராறு முகம் கண்டேன் உளம் மகிழ்ந்தேன்
ஈராறு விழி கண்டேன். எனை மறந்தேன்.
சீராளன் உருக்கண்டேன் செயலிழந்தேன்.
செந்தாமரைப் பதத்தில் சரணடைந்தேன்.

முருகா என அழைத்தேன் முறுவல் கண்டேன்.
குமரா என அழைத்தேன் குளுமை கொண்டேன்
கந்தா என அழைத்தேன் களித்து நின்றான்
கடம்பா என அழைத்தேன். கனிந்து நின்றான்.

பழனி பரங்குன்றம் திருச்செந்தூர்
பழமுதிர் சோலையுடன் சுவாமிமலை
அழகிய திருத்தணிகை மருதமலை
ஆலயங்கள் யாவும் காட்டுவித்தான்.


இதோ !! நான் மருதகாசி பாடலை எனக்குப் பிடித்த ராகமான ஷண்முக பிரியாவில் பாடுகிறேன்.

முருகா !! வா ! எனை ஆட்கொள் !!



2 comments:

  1. தேடிக் கொணர்ந்த முத்துக்கு நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி