Pages

Wednesday, February 20, 2013

இதுவும் கடந்து போம்.

உனக்கு ஒரு பொருள் அதனைப் புலப்படுத்த வேண்டுமென இறை நினைத்தால் எங்கிருந்தாவது உன் காதுகள் கேட்கும் வண்ணம் உன் கண்கள் பார்க்கும் வண்ணம் உனக்கு ஒரு அசரீரி வரும்.  உனக்கு ஒரு பொருள் விளங்க வில்லை என்றாலும் உன்னிடம் ஒரு கேள்வி பிறக்கும் ஒரு கேள்வி உன்னிடம் இருந்து எழுந்தாலே அதற்கான பதில் உன்னைக் காத்திருக்கிறது .  

      பன்னாட்களாக எனது முதல் வலை ஆன இங்கே நான் எதுவுமே இடவில்லை  எழுதுவதற்கு என்ன இருக்கிறது?  எழுதியதெல்லாம் போதும். பேசியதெல்லாம் போதும். பேசியும் எழுதியும் தான் கடந்த ஐம்பது வருடங்கள் கழிந்தனவே, இனி கேள். அதுவும் அமைதியாகக் கேள் என்று எனக்கு நானே இட்ட கட்டளை.

     ஆயினும் நேற்று திறமிகு தி. தமிழ். இளங்கோ அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பு ஏற்று இருக்கிறார் எனத் தெரிந்து அவர் வலைக்கு சென்று பார்த்தேன் படித்தேன். ஒரு மூன்று வார்த்தைகள் தான்.

       இதுவும் கடந்து போம்.

      திரு இளங்கோ அவர்கள் அவருக்கே உரிய எளிய நடையில் ஒரு கதை சொல்லி இருந்தார் .
அந்த மூன்று வார்த்தைகளுக்கு நான் கண்ட பொருள் வேறு அல்ல என்றாலும் என் பாணியிலே அதை பின்னூட்டம் ஆக இட்டிருந்தேன்.

       மாலை வந்தது. சிவன் கோவிலுக்கு சென்றேன்.     உருவாயும் அருவாயும் உளதாயும் இலதாயும்  கல் ஆக அமர்ந்து எனைப்பற்றி விரிவாகக் கல் என வந்தோர்க்கு மௌனமே பாடமாய் சொல்லும் ஆலமர் கடவுள் முன் நின்றேன்.

      ஆகா !   ஈதென்ன விளையாட்டு ?

      இது என்றால் என்ன என எனக்குச் சொல்லத்தான் எனை நீ இங்கு அழைத்தாயோ ?

      என்றோ படித்த பாடல் நினைவுக்கு வந்தது.

      இது பதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
      முது பதி செய்தவன் மூதறிவாளன்.
      விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
      அது பதியாக அமருகின்றானே

      திருமந்திரத்தின் பத்தொன்பதாம் பாடல் இது.

      இறை வாழ்த்துடன் தன் பாயிரத்தைத் துவங்குவார்  திருமூலர்

 ஒன்று அவன்தானே எனினும் சக்தியுடன் சேர்ந்து அவன் இரண்டாயும்  இருப்பான் . அவன் கூற்றுடைத்தான் . ( இருளைப்போக்கினான் ) அவனை வணங்கி நான் என் இருளை அறியாமையை நீக்கபெற்றேன் அவனைப்போன்ற தெய்வம் இல்லை. அவனை அன்றி முத்தி பெறவும் வழி இல்லை.  அவனை நாடுபவரை தந்தையாகித் தாங்குவான்.  அவன் வெம்மையன் இருப்பினும் குளிர்ந்தவன்  அவன் வணங்கக்கூடியவர் எவரும் இல்லை. யாவுமாய் நிற்பவன் அவனே.

     முயற்சியும் பயனும் அவனே. மேகமும் அவனே. மழையும் அவனே. தொலைவிலும் அவனே. என் பக்கத்திலே எனக்கு உறு துணையாகவும் ஊக்கமளிப்பவனும் அளிக்கும் நந்தி தேவனும் அவனே. அவனே உள்ளவன் அவன் இலாத இடம் என்று ஒன்றும் இல்லை.

     அவன் எல்லாவற்றையுமே கடந்து நின்றான். அவன் சோதி ஆனவன்  அப்படிப்பட்ட ஈசனுடன் காதல் கொண்டோருக்கு இணை யாருமே இல்லை.

      அவன் வரம் தரும் வள்ளல்.

      இத்தனையும் வர்ணித்தபின் திருமூலர் சொல்லுவார்:

      அவன் இதுபதி.
      அதுபதி ஆக அமருகின்றானே.

      உலகத்தே இருக்கும் ஏழுவித வாசனைகளையும் துறந்து வடக்கே அவனைக் கண்டு தவம் இருக்கும் அடியார்கள் (மெய்த்தவம் செய்யும் அன்பர்கள்) மனதிலே தான் அவன் விளங்குகிறான் , வீற்றிருக்கிறான்.

     ஆக
     இது என்றால் வடக்கு.
     அது என்றால் தவம்.

      இது    கட அது     போம்.
 கட +அது இரண்டும் சேர்ந்து கடந்து
 போம்.
 அது ஆனது  போலும்.

, 'இறை' யானே  என உணர்ந்தது போம். ( போலும்.),  

      தான், தனது என்னும் எல்லாவற்றினையும் துறந்து தவம் செய்பவன் இறை உணர்கிறான்.
இறை என்பதை அழியா இயல்பு என்னும் வகையில் புரிந்து கொண்டாலும் வள்ளுவன் கூறுவாரே : இயல்பு ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய நிஜ உருவத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு கடந்து செல்லும் ஆற்றல் படைக்கும். .

     ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே
      பேரா இயற்கை தரும். ...   (குறள் 370)

      நிறையா இயல்புடைய ஒருவன் ஆசையை விடுவானே ஆயின், அது விட்ட அப்பொழுதே அழியா இயல்பை அடைந்து அது ஆகிறான்   ( மணக்குடவர் )

     இதுவும் கடந்து போம். 

(வலிந்து பொருள் சொல்வதாக் தோன்றினாலும் சரியான வழியே செல்கிறேன் எனவும் தோன்றுகிறது )


பிருஹத் ஆரண்யகத்திலும் இதுவே சொல்லப்படும்

ஒரு ஜீவாத்மா தன புற ஆவரனங்களைத் தவிர்த்து, அப்பால் தனக்குள்ள ஆசையையும் துறந்து, அக நிலைகளான மனம், புத்தி, இவையும் தான் இல்லை என உணர்ந்து, இது அது தான், நான் உண்மையிலே அவன்தான் இன்ற நிலைக்கு உந்தப்படுகிறானோ அவனே பரமாத்மா ஆகிறான்.
ஆகவே இது தனது வெளி நிலையினைக் கடந்து போகும்பொழுது அது இதுதான்  என உணர்கிறது. 
அத்வைத வாதத்தின் உட்கருத்தே இது அதுதான்.
நீ அவன் தான்.
உணர்ந்தவன் தன்னுள் சொல்கிறான்.
நான் அவனே. 
 
(வட மொழியில் பகர்கையில்
அஹம் பிரம்மாஸ்மி )


     
முடிப்பதற்கு முன் ஒரு நன்றி சொல்லவேண்டும்.

திரு தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு.  

உங்கள் பெயரில் உள்ள
 
 முதல் மூன்று எழுத்துக்களை எடுத்துக்கொண்டால்,
 
தி. த. இ.
தியாகம்...... தவம்.......  இறை 


அதுவே இந்த கட்டுரையின் நிலை.

    
    



 

14 comments:

  1. தான், தனது என்னும் எல்லாவற்றினையும் துறந்து தவம் செய்பவன் இறை உணர்கிறான்.
    இறை என்பதை அழியா இயல்பு என்னும் வகையில் புரிந்து கொண்டாலும் வள்ளுவன் கூறுவாரே : இயல்பு ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய நிஜ உருவத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு கடந்து செல்லும் ஆற்றல் படைக்கும். .

    இயல்பாய் இயைந்த
    அருமையான பகிர்வுகள் ..

    ReplyDelete
  2. திருமந்திரத்தின் பாடலோடு நல்ல விளக்கம் ஐயா...

    குறளும் சிறப்பு...

    நன்றி...

    ReplyDelete
  3. // உனக்கு ஒரு பொருள் அதனைப் புலப்படுத்த வேண்டுமென இறை நினைத்தால் எங்கிருந்தாவது உன் காதுகள் கேட்கும் வண்ணம் உன் கண்கள் பார்க்கும் வண்ணம் உனக்கு ஒரு அசரீரி வரும். உனக்கு ஒரு பொருள் விளங்க வில்லை என்றாலும் உன்னிடம் ஒரு கேள்வி பிறக்கும் ஒரு கேள்வி உன்னிடம் இருந்து எழுந்தாலே அதற்கான பதில் உன்னைக் காத்திருக்கிறது //

    உணர்ந்தவர்க்கே இந்த உண்மை விளங்கும். உங்கள் மூலமாக எனக்கு ஒரு அசரீரி என்று நினைத்து இந்த சிந்தனையை அசை போடுவேன்.

    என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனது பதிவினைப் பற்றி சொன்னமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. தான், தனது என்னும் எல்லாவற்றினையும் துறந்து தவம் செய்பவன் இறை உணர்கிறான்.
    இறை என்பதை அழியா இயல்பு என்னும் வகையில் புரிந்து கொண்டாலும் வள்ளுவன் கூறுவாரே : இயல்பு ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய நிஜ உருவத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு கடந்து செல்லும் ஆற்றல் படைக்கும். . //

    இதுவும் கடந்து போம்’
    என்ற சொல்லுக்கு அருமையான விளக்கங்கள் தந்து விட்டீர்கள்.
    தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சார்.
    உங்கள் எழுத்து எல்லோருக்கும் பயன்படும்.

    ReplyDelete
  5. வாசித்து மகிழ்ந்தேன் படித்து உணர்ந்தேன் மீண்டும் வாசிக்க வேணும் மனதில் நிறுத்த வேணும் என எண்ணம் தோன்றுகிறது. பின் மாலையில் மறுபடி வாசிப்பேன். இறை ஆசி நிறையட்டும்.. ஓரு கவலை சகோதரர் இளங்கோவிடமும் திருமதி கோமதியிடமும் என்னால் போக முடியவில்லை. அந்த வலைத்தளம் இரண்டும் திறக்க ஆடுகிறது.
    Vetha.Elangathilakam.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வருகைக்கு நன்றி.

    திருமதி கோமதி அரசு அவர்கள் வருகைக்கு நன்றி.

    திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லும் ரக்ஷ்கஹ என்னும் சொல்லே பொருத்தமானது. மறுக்க இயலாது.

    யார் அறத்தை காக்கிறார்களோ அவர்களை அறம் காக்கும் என்னும் பொருளிலே அது அமைகிறது.

    இருப்பினும் அறம் தன்னைக் காப்பவரைத் தான் காக்கும் என்றால் அறவழி நடவாதோர் ஏதேனும் அறத்திற்குப் புறம்பாக‌
    ஏதேனும் செய்துவிடின் அறம் அவர்களைக் காக்காது எனும் பொருள் படுகிறது. அப்படி இருப்பின், அது சரியா என ஒரு கேள்வி
    பிறக்க ஏதுவாக இருக்கிறது. நீதி கிடைக்காது என்று எதிர்பார்ப்பவர்க்கும் நீதி வழங்குவதுதான் நீதியாகும். இன்னமும் இது பற்றி
    ஆயவேண்டும்.

    திருமதி கோவைக் கவி அவர்கள் வருகைக்கு நன்றி. தங்களை முக நூலிலும் தங்கள் குறிப்பினைக் கண்டேன். நீங்கள் சிலர் வலைகளுக்குச்
    சென்று பார்க்கும்பொழுது எழுத்துக்கள் ஆடுகின்றன. படிக்க இயலவில்லை, என்று சொல்லி இருக்கிறீர்கள். இது ஹார்டு வேர் ப்ரச்னையாக‌
    இருக்காது என நினைக்கிறேன். ஒரு வேளை அவர்கள் யூனிகோடு ஃபான்ட் செயல்படுத்தாமல் வேறு ஏதேனும் ஃபான்ட்களை உபயோகித்திருந்தால், இது போன்று நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மொசில்லா ஃபயர் ஃபாக்ஸுக்கு சென்று அதியன் உருமாற்றி யை
    உங்க்ள் கணினியில் நிறுவினால் இந்த ப்ரச்னைக்கு தீர்வு காணலாம் என நினைக்கிறேன்.

    திரு தி.தமிழ் இளங்கோ அவர்க்ள் இந்த பதிவினைப் பார்த்து என்னை வலைச் சரத்தில் தொடர்பு தந்திருக்கிறார்கள். அவருக்கு என் நன்றி.


    சுப்பு ரத்தினம்.


    ReplyDelete
  7. அருமை தாத்தா. ஆலமர் கடவுள் உங்களுக்கும் மௌனோபதேசம் செய்து விட்டான் போலும்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. sury siva

    தாங்கள் என்னுடைய பதிவுக்கு (ஒச்சப்பனும் நானும் ..)இட்ட பின்னூட்டத்தை நிறுத்தி வைத்துள்ளேன். ஸ்ரீதர் என்ற நண்பருக்கு எழுதிய பின்னூட்டம் தவறுதலாக எனக்கு வந்துள்ளது என்று நினைக்கிறேன். உங்கள் முகவரி தேடிப்பார்த்து கிடைக்காததால் இங்கும், ஒச்சப்பனும் நானும் என்னும் பதிவிலும் பின்னூட்டமாகவே இருக்கிறேன்.

    ReplyDelete
  9. ஐயா! வணக்கம். இதுவும் கடந்து போம். அருமையான தலைப்பு நல்ல விஷயம்.
    மன்னிக்க வேண்டும் இப்பொழுத்துதான் என் கண்ணில்பட்டது.
    // உனக்கு ஒரு பொருள் அதனைப் புலப்படுத்த வேண்டுமென இறை நினைத்தால் எங்கிருந்தாவது உன் காதுகள் கேட்கும் வண்ணம் உன் கண்கள் பார்க்கும் வண்ணம் உனக்கு ஒரு அசரீரி வரும். உனக்கு ஒரு பொருள் விளங்க வில்லை என்றாலும் உன்னிடம் ஒரு கேள்வி பிறக்கும் ஒரு கேள்வி உன்னிடம் இருந்து எழுந்தாலே அதற்கான பதில் உன்னைக் காத்திருக்கிறது //

    பாருங்கள் இத்தனை சிறப்பாக நீங்கள் சொன்னதை தெரிந்துகொள்ளவே எனக்கு இவ்வளவு காலதாமதமாகிவிட்டது. இப்பொழுதாவது கண்டுவந்தேனே படித்தேனே என மகிழ்கிறேன்.

    அற்புதமான விஷயம். அழகாக விபரித்துகூறியுள்ளீர்கள். இப்பொழுத்தான் இதுவும் கடந்து போம் என்பதன் சரியான விளக்கமதை புரிந்துகொண்டேன். அருமை ஐயா.

    இப்படி நல்ல நல்ல விஷயங்களை தொடர்ந்து தந்துகொண்டிருங்கள். எழுதுங்கள். படிக்க ஆவலுடன் உள்ளேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  10. ஐயா... நான் இங்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்து கருத்துப்பதிந்திருந்தேன். வெளியே காணவில்லையே... ஒரு வேளை உங்க ஸ்பாம் பெட்டியில் முடங்கி விட்டதோ... பாருங்கள்.

    அடுத்து என் வலைத்தளத்தில் கருத்துப்பகிர்ந்திருந்தீர்கள் மிக்க நன்றி ஐயா.
    அங்கு என் கவியை பாடலாக பாட விரும்பியதாகக் கேட்டிருந்தீர்கள் தடை ஒன்றும் இல்லை ஐயா.
    பதிலாக மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு. நீங்கள் பாடத்தேர்ந்தெடுக்கும் கவியா நன் பாடியது.... பெருமை தாங்க முடியவில்லை.

    மிக்க மகிழ்ச்சி. தாராளமாகப் பாடுங்கள். பாடி எனக்கும் அதை தாருங்கள். மிக்க நன்றி ஐயா.

    என் அன்பான வணக்கமும் வாழ்த்துக்களும் உங்களுக்கு!

    ReplyDelete
  11. உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்லியவாறே
    உங்களது பாடலை யூ ட்யூபிலே இட்டு அதை எனது பல்மொழி வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.

    பார்க்கவும் .

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  12. ஐயா... ரொம்பவே நன்றாகப்பாடி இருக்கின்றீர்கள். அருமை. மிக நன்றாக இருக்கின்றது.
    எத்துனை ஞானத்துடன் அனுபவித்துப் பாடி இருக்கின்றீர்கள். கேட்கும்போது நான் எழுதிய கவிதானா என எனக்கு பெரீய வியப்பாக இருக்கிறது. அவ்வளவிற்கு லயித்துப்போய் நீங்கள் பாடியிருப்பத்தைக் கேட்டேன்.

    உங்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.

    நன்றி ஐயா நன்றி!

    ReplyDelete

  13. அய்யா! கருத்துரைகள் ( COMMENTS ) மட்டுமே தந்து கொண்டு இருக்கிறீர்கள். அவைகளே பல பதிவுகளாக சுவராசியமாக உள்ளன. இருந்தாலும் உங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்குப் பயன்படும் வண்ணம் பதிவாகப் போடவும். நீங்கள் பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆனதுபோல் தெரிகிறது.

    ReplyDelete
  14. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தலை வணங்குகிறேன்.
    விரைவில் எழுதுகிறேன்.

    அண்மையில் நான் என்றோ உளவியல் குறித்த வகுப்புகளில் எடுத்த
    பாடம் ஒன்று.. மனித உறவுகளை மேம்படுத்துதல்

    ஒரு விளையாடல் உங்கள் உறவுகளுடன்.

    அதுவும் ஒரு சீரியஸ் பதிவுதான்.
    இங்கே இருக்கிறது.

    பாருங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி