Pages

Tuesday, July 13, 2010

தருமம் ஒன்றே துணை நிற்கும்.

தருமம் ஒன்றே துணை நிற்கும்.
 உன்னையும் என்னையும் ஏன், யாவரையுமே காக்கும்.
எப்போது?
தருமத்தை நீ காக்கவேண்டும். அப்போது தருமம் உன்னை காக்கும்.

தர்மம் என்பது தான தர்மத்தைப் பற்றி மட்டும் அல்ல. அது  நாணயத்தின் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நம் ஒவ்வொருவருக்கும் சமூகத்தினால் கொடுக்கப்பட்டு இருக்கும் விதிகள், நெறிகள், பண்புகள்.
இவைகள் எல்லாவற்றையும் ஒரு நாட்டின்  சட்டம் சொல்கிறதா என்றால் ஓரளவு மட்டுமே சொல்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.  சட்டத்திற்கு ஒரு எல்லை உண்டு.
ஒரு நாட்டின் எல்லைகள் போலவே .  ஆனால், சட்டத்திற்கு மேல் நியாயம் இருக்கிறது.
நியாயத்திற்கு மேல் தர்மம் இருக்கிறது.
ஆகவே, சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறேன்,  நடக்கிறேன், காரியங்கள் செய்கிறேன் என்று ஒருவன் சொன்னால் போதுமா ?
போதாது என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் தான் செய்வது நியாயமா ? தர்மமா ? என்ற கேள்விகளை தமக்குத்தாமே கேட்டுக்கொள்தல் அவசியமாகிறது.  
சட்டத்திற்குட்பட்டு, ஆனால் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் புறம்பான செயல்களை, நிதி மன்றங்கள் ஒன்றும் செய்ய இயலாது.  இந்த நாடு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் இதுவே தான் நடப்பு நிகழ்வு.
தாம் செய்வது நியாயமா தர்மமா என்று யார் கேட்பது?
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது முது மொழி,
தர்மத்தையும், நியாயத்தையும் சமூக நலனுக்காக தொழில் செய்பவர்கள்  சரிவர கடைப்பிடிக்கிறார்களா ?
அவரவர் மனசாட்சி தான் சாட்சி. 



தருமம் தலை காக்கும் எனும் பாடல் நம் மனத்திரையில் ஒலிக்காது என்றும் இருந்ததில்லை.

"நாச்செற்று விக்குள் மேல் வாராமுன், நல்வினை
மேற்சென்று செய்யப்படும் "

என்பார் வள்ளுவர்.  அவர் மேலும் சொல்லுவார்:

"அன்று அறிவாம் என்னாது அறம் செய்க : மற்றது
போன்றும் கால் பொன்றாத் துணை. ""

இவ்விரண்டையும் மறுமுறை உணர்த்தியது போல இருந்தது இன்று காலை நான் படித்த இரு பதிவுகள். இவற்றை எழுதிய ஆசிரியர் திருமதி ஹேமா அவர்களுக்கு எனது நன்றிக்கடனை எடுத்து சொல்லிடவே இந்த பின்னூட்டத்தை அவர்கள் பதிவில் இட்டேன் மற்றும் பாடினேன். குரங்கின் கையிலே குச்சியை கொடுத்து ஆடு என சொல்லிவிடின், அது என்ன ஆட்டம் ஆடும் ? என்ன சொல்லி பாடும்?  எதிரே உட்கார்ந்திருப்பவனோ அரசன்.

இன்று காலை தமிழ் வலையுலகப் பதிவு ஒன்றில் ஒரு அழகான கவிதை படித்தேன். பத்து வரிகளில் படித்த அந்த கவிதை என்னை பத்து நிமிடங்களுக்குக் கண் கலங்க வைத்துவிட்டது. அறியா வயசு என்னும் கவிதை அது.  அதை இங்கே படியுங்கள். அந்த உணர்வுகளில் முழுகி இருக்கும்பொழுதே அவருடைய இன்னொரு பதிவையும் பார்க்க நேர்ந்தது. அவர் ஒரு தமிழ் கவிஞர்  .  ஒரு படத்தை இட்டு நண்பர்களை எல்லாம் கவிதை எழுதலாம் வாருங்கள் என்று எழுதியிருந்தார். அது ஒரு குரங்கு குச்சியை வைத்துகொண்டு ஒரு அரசன் முன்னாலோ அல்லது தனது எசமான் முன்னிலையில் ஆடுவது பொல இருந்தது. அவரவர்கள் தத்தம் மன நிலைக்கு ஏற்றபடி அரசியல், சமூகம் ஆகிய நிலைகளின் இருந்து கவிதை எழுதி இருந்தனர்.  நானும் ஒன்று எழுதினேன்.

அது இங்கே:


     நானும் ஆடறேன். நீயும் ஆடறே !!
     ஆடுவதுனக்குத் தெரியாது.  நீ
 
    ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம்
    எங்கே என்னும் தெரியாது.   நீ

    ஆடும  ஆட்டம் முடியும் வரைக்கும்
    தேடிய பாவம் தெரியாது.
   
   பாடிய சந்தமும்  ஓடிய பந்தமும் 
   நாடியே    திரும்பவும்  வாராதோ !

    வாடிய உறவும்  வாசமும் கொண்டு
   தேடியே என்னை வாராதோ !

    அறியாயோ நீ ! ஆண்டவனருகில் !!
    நெறிகள் யாவும் மறந்தனையோ !!

    அமரும் அரியணை அசையும் ஒரு நாள்
    தமரும் தொலைந்தே போய்விடுவார்.

     அருமை எனவே வாங்கிய யாவும்
   அங்கங்கே தான் நின்று விடும்.
    எருமைவாகனன்  அழையும்போதுன்
    உருவும் உடனே மறைந்துவிடும்.

   கருமம் ஒன்றே துணை நிற்கும் அந்த‌
    தருமக் குரலினைக் கேட்டிடுவாய்.  
 
  


12 comments:

  1. அழ‌கான‌ க‌விதைக்கான‌ சுட்டி என் ப‌திவுக்கு போகுது,யாராவ‌து கோப‌ப்ப‌ட‌போகிறார்க‌ள்,மாற்றிவிடுங்க‌ள்.:-)
    உங்க‌ள் க‌விதை ந‌ன்றாக‌ இருக்கு.

    ReplyDelete
  2. என் பதிவிற்குக் கிடைத்த ஆசீர்வாதமும் வெற்றியும் என் தளத்தில் உங்கள் கவிதை.அதை உங்கள் குரலிலேயே பதிவிட்டுக் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.என் தாத்தாவை உங்கள் உருவத்தில் கண்டேன்.நன்றியோடு உங்கள் வாழ்த்துக் கேட்கும் இவள் ஹேமா.

    ReplyDelete
  3. அருமை தாத்தா..! மிக்க நன்றி...!

    ReplyDelete
  4. பாட்டுத்தாத்தா பாட்டை ரசித்தேன்

    ReplyDelete
  5. அய்யா! நெகிழ்ச்சியான குரலாக, அருமையான
    தாலாட்டு, சோகம் என அனைத்தும் சேர்ந்தது போல
    மிகஅருமையாக உங்கள் குரல் ஒலித்தது..
    ரொம்ப ..ரொம்ப அருமை!
    நன்றிகள்!

    ReplyDelete
  6. வடுவூர் குமார்
    ஹேமா
    சதீஷ் குமார்
    தமிழ் அமுதன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. அசத்தி இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. அசத்தி இருக்கிறீர்கள்... அருமை

    ReplyDelete
  9. தாத்தா...!

    உங்கள் வாழ்த்தும் உங்களை போன்ற முயற்சியும் எனக்கும் வேணும்!

    ReplyDelete
  10. ஹேமா அவர்களின் தங்களின் இடுகையின் வாயிலாகப் படிக்க முடிந்தது. நன்றி அய்யா.

    தங்களின் கருத்து ஆழ மிக்க பாடலையும் , அதை உங்களின் குரலில் கேட்கையில் இன்னும் அருமையாக இருந்தது

    வாழ்த்த வயதில்லை

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி