Pages

Tuesday, June 08, 2010

கருப்பன் காப்பாத்துவான் !!



கருப்பன் காப்பாத்துவான் !!

ஆம் !! எங்கள் குடும்பத்தில் பரம்பரையாக எல்லாப்பெரியவர்களும்
வாரி வழங்கும் சொற்கள் இவை.

"கருப்பன் யார் ?
அவன் எங்கே இருக்கான் ?எப்படி இருப்பான் ?"

என் அம்மாவிடம் நான் கேட்டேன். அப்ப எனக்கு அஞ்சு  வயதிருக்கலாம்.

"எங்கேயா ? எங்கேயும் இருப்பான்...உன் கூடவே இருக்கான். உன்
கூடவே இருப்பான்.."

"எப்படி இருப்பான் ? "  சின்ன வயசிலே நான் ஒரு தொண தொணா. 


"அதான் கருப்பன் அப்படின்னு சொல்லிவிட்டேனே !
கருப்பா இருப்பான்
குள்ளமா இருப்பான்"

"அப்பறம் ...  ..  ?"   நான் இழுத்தேன். இன்னும என்ன? "


"கையிலே ஒரு குண்டாந்தடி வச்சுக்கிட்டு இருப்பான். "
"அப்பறம் ...  ....?
"நீ எங்க போறதுன்னாலேயும் உன் கூடவே வருவான்...
வர்றான் . "

"ஏம்மா அவன் வரணும் ?"
"நான் வரமுடியாதில்ல..."
"அப்பா ?"
"அப்பா வேலைக்கு போயிடறாரில்ல..."

"என் ஃப்ரன்ட்ஸ் வருவாங்கம்மா !"
"அவங்கவங்களுக்கு அவங்கவங்க சோலி இருக்குதுல்ல !!"

கடைசியாக கேட்டேன்.:
"ஏம்மா அவரு நம்ம பின்னாடி வர்றணும் ! அவருக்கு வேர சோலி கிடையாதா !"

அம்மா பதில் சொன்னாள்.
"இதாண்டா அவரு சோலி."


இது நடந்து ரொம்ப வருசத்துக்கப்பரம்,எங்க வீட்டுலே எல்லாரும் ஒரு நாள் எங்க குலதெய்வம் கோவிலுக்கு போனாங்க. நானும் போனேன். என்னையும் சேர்த்து அன்னிக்கு 2 முழு டிக்கெட், 6 அரை டிக்கெட். டி.வி.எஸ். பஸ். லே போனோமா !

எங்க ஊரு, அதான் திருச்சிலே, லால்குடிக்கு
கொஞ்சம் முன்னாடி, ஆங்கரைன்னு
எங்க கிராமம், நான் புறந்த ஊரு, அங்கிருந்து கொஞ்சம் முன்னாடி,
மாந்துரைன்னு ஒரு கிராமம். 


அதுலே ஒரு சிவன் கோவில்..
அதுக்கு பக்கத்துலே அந்த கருப்பன்.
அந்தக்கருப்பனுக்கு எங்க குடும்பத்திலே மாந்துறையான் என்று பெயர்.
எங்க குல தெய்வம்.

கருப்பா, குண்டா, குள்ளமா, கையிலே ஒரு தடி வச்சுகினு...
ஆமாம் ! அம்மா சொன்னது இந்த சாமிதானா ?


என் பக்கத்துலே அப்பா நின்னுகிட்டு இருந்தாரு. 


அப்பா ! அப்பா !
என்னடா !

அப்பா ! இவரா நம்ம பின்னாடி எப்பவும் இருக்காரு ? எங்கே
போனாலும் வருவாருன்னு அம்மா சொல்றாளே !

ஆமாண்டா...

"அது எப்படி சொல்றே ?" 

( அப்ப எனக்கு வயசு பத்து இருக்கும்னு நினைக்கிறேன்.)

"அது ஒரு நம்பிக்கைதாண்டா. நமக்கு எப்பவுமே சாமி துணை வேண்டும். இல்லையா ?"

வேண்டுமா இல்லையா எனச் சரியாகத் தெரியவில்லை அப்போது.
தலையை மேலும் கீழும்,  பக்க வாட்டில், (வர்டிகல், ஹரிசான்டல்), எல்லா பக்கமும் அசைத்தேன்.
"அந்த
சாமி நம்பிக்கைதாண்டா  மனசுலே ஒரு தைரியத்தை தருது. "
திரும்பி அதையே சொன்னார்.
நம்பிக்கை தாண்டா நமக்கு மனசுலே ஒரு தைரியத்தை தருது , ஒரு சூபர் ஃப்ரன்டாவும் இருக்குது !!

"அப்பா ! எனக்கு வளவன் தான் சூப்ர ஃப்ரன்டு. "அப்படின்னு பதில் சட்டுன்னு சொன்னேன்.  (வளவன் என் பிரெண்ட் அந்த மஹா பாரத பீமன் மாதிரி இருப்பான்.  யாரவது 
என்னை ராங் பண்ணினா லெப்ட் ரைட் வாங்கிடுவான்.  )

"ரைட் தான். அந்த வளவன் மூலமா அந்த சாமி தான் நமக்கு துணையாய் நிற்குது. அப்படின்னு வச்சுக்கயேன்."

"ஏன் அப்பா ! அப்ப சாமிங்கறதே ஒரு நம்பிக்கைதானா ?"

"அப்படியும் எடுத்துக்கலாம். எதை நம்பறோமோ அதாவே நம்ம ஆயிடறோம்."


"அதுலே என்னப்பா நமக்கு இருக்குது ? "  விடாமல் நான் கேட்டேன்.

அப்பா சொன்னார் " ஒரு காரியத்துலே  ஜெயிப்போம் என்னு நம்பிக்கையோட இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம். "

இந்த நம்பிக்கைய வச்சுக்கின்டே இருந்தோம்னா, நாம என்னிக்குமே ஜெயிச்சுக்கிட்டே போயிட்டு இருப்போம்."

ஐம்பது பிளஸ் வருசத்துக்கு முன்னாடி எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த இந்த உரையாடால், 58 வருசம் கழிச்சு, எனக்கு இன்னிக்கு மேடம் கவி நயா அவர்கள்
பதிவைப்படிச்ச்பின்னே பளிச்சுன்னு மின்னல் அடிச்சு தெறிச்சமாதிரி நினைவுக்கு வந்துச்சு.

அவங்க சொல்றது எல்லாருக்கும் நிசம். எப்பவும் நிசம்.

என்னாதான் சொல்றாங்க இந்த அம்மா ? அங்கேயே போய் பாருங்க...


அதப் பாத்துட்டு நா அத விருத்தமா அந்த கால பண்லே பாடியிருக்கேன்.(
இப்ப இத மோகனம் அப்படின்னு சொல்றாங்க.
அதயும் கேளுங்க.

எப்படி இருக்கு, அப்படின்னு ஒரு வார்த்தை எழுத்றது உங்க
இஸ்டம்.




2 comments:

  1. அழகான உரையாடலை அருமையாக பதிஞ்சிருக்கீங்க தாத்தா. பாடலும் அழகாக அமைஞ்சிருக்கு. மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. meenaksury. blogspot.com ponen. ippo than adobe flash player install panninen. appadiyum ketka mudiyalai. virus problem computerle irunthathu. O.S ippoo than re install panninen. appadiyum ketka mudiyalai, ennanu puriyalai, yaraiyavathu ketu parkiren. :((((((( sound than jasthiya varuthu. athai kuraicha onnume varalai!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி