Pages

Sunday, January 06, 2008

மூன்று சிங்கங்கள் !!!நான்கு நரிக்குட்டிகள் !!!!ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !

நமது சீவனை என்னென்ன பிடித்துக்கொண்டிருக்கின்றன ? அறிவோமா ?

மூன்று சிங்கங்கள் !!!
நான்கு நரிக்குட்டிகள் !!!!
ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !

திகைத்து நீங்கள் நிற்பது நன்றாகவே தெரிகிறது. நீங்களா திகைக்கின்றீர்கள். உங்கள் சிந்தை அல்லவா
திகைத்து நிற்கிறது.
திருமந்திரத்தின் 2214 வது பாடல் என்ன சொல்கிறது பார்ப்போமா ?

" திகைக்கின்ற சிந்தையும் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே."

சிந்தை தனை சிதற விடாமல் காப்பது சாதாரணமா என்ன ?
"சென்றவிடத்தாற் செலவிடாது தீதொறி
நன்றின்பால் உய்ப்பது அறிவு " எனவோ கூறினார் வள்ளுவர்.

அந்த அறிவை ப்பயன்படுத்தி இது நன்மை, இது தீமை எனப் பிரித்து அறிய இயலாதோர் மனந்தனில்
மூன்று சிங்கங்கள் (அதுவும் பசி வேகத்தில் ) குடி இருக்குமாம். அவை என்ன ? காமம், வெகுளி, மயக்கம்
என்ற கொடிய விலங்குகள் தான் அவை.
அவற்றைக் கூண்டில் அடைக்கவேண்டாமா? ஆனால் அதற்கு தடையாக நான்கு நரிக்குட்டிகள் இங்குமங்கும்
நம்மை ( நம் சிந்தையை ) சிதறடித்து விடுகின்றன். அவை நமது அந்தக்கரணங்களே. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கு நரிகள் வஞ்சகமாய் ( நமக்கு மகிழ்ச்சி தருவது போன்ற ஒரு பிரமையை உண்டுபடுத்தி) விடயங்களை நம்மைப் பற்ற வைக்கின்றன். அது சரி, இந்த ஐந்து ஆனைக்கன்றுகள் யாவை? நமது ஐந்து புலன்கள்தாம். இந்த நரிகள், ஆனைக்கன்றுகள் மூலமாக சதி செய்து ( conspiracy ) நம்மை சிங்கங்களுக்கு
இரையாக்கிவிடுகின்றன்.

இதிலிருந்து தப்ப ஒரே வழி என்ன?
சித்தத்தை சிவன் பாலே வைய்யுங்கள்.
அவன் நம் இதயத்திலே சோதி வடிவில் இருக்கிறான் என உறுதியுடன் நம்பி அதே எண்ணத்தில் நிலை பெறுங்கள்.
மனம் அமைதி பெறும். நல்லது எது தீயது எது என்ற தெளிவு ஏற்படுவது திண்ணம்.
இந்தத் தெளிவு ஏற்பட்ட பின், ஐம்புலன்களை நமக்கு அடிமையாக்குங்கள். யானையை அடக்க அங்குசம் தேவை. ஏகாக்ர சித்தம் ( concentrated thought on single point ) இந்த அங்குசமாகப் பயன்படும்.
புலன்களை அடக்கி விடின், நரிகள் இடைஞ்சல் செய்வது நன்றாகவே புலப்படும்.
அந்த நரிகளை விரட்ட, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகள் தூய்மைப்படுதல் அவசியம்.
மனம் என்பது சீவன் மேல் போர்த்தப்பட்ட ஆவரணம். இதில் " நான் " எனும் உணர்வு ஒரு வைரஸ் போல
ஒட்டியிருக்கும். அந்த கிருமி தனை ஒழிக்க ஒரு நாசினி தேவை. நாசினி ஓங்கிய அறிவு ( higher intellect )
தான். ஓங்கிய அறிவின் விளைவு புத்தி தன் வசம் ஏற்படும். புத்தி வசமான பிறகு மூன்று சிங்கங்களை அடக்குவது அல்லது கூண்டில் அடைப்பது கடினமா என்ன ?

காமம் என்பது வெறும் ஆசை அல்ல. நமக்குச் சேரவொண்ணாதவைகளின் பால் நமக்கு ஏற்படும் ஒரு வெறி.
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை மூன்றுமெ இதில் அடங்கும்.
நாம் எவை வேண்டும் என நினைக்கிறோமோ, அவற்றினை வைத்திருப்போர் மேல் நமக்கு ஏற்படும் பொறாமை, நமக்கு கிடைக்கவில்லையே என்ற நிலையில் ( frustration ) எழுகின்ற கோபம். கோபத்தினால் உண்டாகும்
மயக்க நிலை . அமைதி குலைந்த நிலை. ஆவேசம் கொண்ட நிலை. எதைச்செய்தாவது பெறவேண்டும் என்ற நிலை. இது மனம் அழுகிப்போன நிலை.

அழுகிய மனது ஒரு புற்று நோயாம். புற்று நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டாமா?புற்று நோய் வந்தவுடன் கவலைப்படுவதில் என்ன லாபம்?

புற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு ஒரு வழிதான் தெரிகிறது.
அதையும் வள்ளுவரே சொல்வார்.

" பற்றுக பற்றற்றான் பற்றினை ‍= அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு " ...350

இன்னமுமா சொல்லவேண்டும். இல்லை. ஆனால் செய்யவேண்டும். என்ன செய்வது?
முதற்கண்.
சும்மா இரு.
சொல்லற.

8 comments:

  1. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க!
    //மூன்று சிங்கங்கள் !!!
    நான்கு நரிக்குட்டிகள் !!!!
    ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !
    //
    :-)

    //இதிலிருந்து தப்ப ஒரே வழி என்ன?
    சித்தத்தை சிவன் பாலே வைய்யுங்கள்.
    //
    ஆன்மா/ஆத்மாவை சொல்லுறீங்கன்னு எடுத்துக்குறேன்.

    நீங்க சொன்னதிலே ஹை லைட் இதுதானுங்க.
    //சும்மா இரு. //
    இதைத் தான் அத்தனை யோகிகளும் சொல்லுறாங்க. புரிந்து அறிந்து உணர்ந்து நடக்க முயல்பவர் ஒரு சிலரே.

    ReplyDelete
  2. //சித்தத்தை சிவன் பாலே வையுங்கள்//

    சித்தம் என்பதற்கு பல்வேறு இடங்களிற் பல பொருள் உண்டெனினும்,
    சித்தம் என்பதற்கு மனம் என்றே இங்கு பொருள் கொள்தல் வேண்டும்.

    உதாரணமாக, 2969 பாட்டினிலே திருமூலர்,

    "சித்தஞ் சிவமாய் மலமூன்றுஞ் செற்றவர்
    சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தங்
    கத்துஞ் சிலுகுங் கலகமுங் கைகாணார்
    சத்தம் பரவிந்து தாணமென் றெண்ணியே."

    ஒருவரது எண்ணங்களே சிவனாக, சிவமயமாக ஆகிவிட்ட போதிலே
    ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மூன்று மலங்களையும் அவர் வென்றுவிடுகிறார்.
    (அதாவது தன்னைத் தளைப்படுத்தும் மலங்களுக்குக் கட்டுப்படமாட்டார்.)
    மேலும் வாதமும் பூசலும் பிதற்றலும் செய்யார். அவருக்கு சத்தம் என்பதெல்லாமே
    எல்லாம் பரந்து கிடக்கும் பேரொளியின் நுண்மை வாக்கே ஆகும்.

    சீவனுக்குள்ளே குடிகொண்ட ஆத்மா நம் புலன்கள் வழியே கிரகிக்கப்படும்
    எல்லாவற்றிற்கும் சாட்சியே. மனதை அடக்கக் கற்றுவிடின் ஆத்மாவின்
    உண்மை சொருபம் விளங்கும்.

    /சும்மா இரு. //
    //இதைத் தான் அத்தனை யோகிகளும் சொல்லுறாங்க. புரிந்து அறிந்து உணர்ந்து நடக்க முயல்பவர் ஒரு சிலரே.//

    ஆன்மீகப்பயணத்தினை மேற்கொண்டவர், தன்னுடன் எத்தனை நபர்கள் வருகின்றார்கள் என்று கவலைப்படுவதில்லை.

    சொல்லப்போனால், ஆத்மா விசாரம் செய்யத்துவங்கும்போதே சுற்றியுள்ள‌
    எல்லாமே நினைவை விட்டு அகல்கின்றன.

    ரமணர் திருவண்ணாமலையை நோக்கி சென்றபோது, தன்னுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என‌
    கணக்கு போட்டுக் கொண்டா சென்றார். ?

    "காட்டாறு" அவர்கள் வரவேண்டும்.
    உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது.
    தங்கள் வருகைக்கு நன்றி.
    இவ்வண்,
    சுப்புரத்தினம்
    தஞ்சை.

    ReplyDelete
  3. தங்கள் விளக்கத்துக்கு நன்றி அய்யா! உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இன்றுதான் இந்த பதிவினை படித்தேன். நன்று...முயல்கிறேன்.

    ReplyDelete
  5. திரு.மதுரையம்பதி அவர்கள் வருகைக்கு
    மிக்க நன்றி.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    பி.கு: நேரம் கிடைப்பின் இசையின் இலக்கணங்கள் பற்றி
    படித்திட வாருங்கள்.
    http://movieraghas.blogspot.com
    புதுமையாக உலகத்தில் நடப்பனவற்றினைப்பற்றி :
    http:/anewworldeveryday.blogspot.com

    ReplyDelete
  6. கொஞ்ச நாள் இந்த பக்கம் வராமல் போய்விட்டது.
    திருமந்திரத்தையும் & குரளையும் வைத்து சும்மா கில்லி விளையாடியிருக்கீங்க.சூப்பர்.

    ReplyDelete
  7. சூப்பர் சூரி அசத்தல் விளக்கம்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. இந்தமிருகங்களுக்கு இரை போடுபவன் அரக்கனாகிறான்
    மிருகங்களையே இரையாக்குபவன் ஆண்டவனாகிறான்.

    ஆண்டவனாவதும் அரக்கனாவதும் நம் கையிலேயே இருக்கிறது.


    அருமையான பாடல் எடுத்து அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
    மிக்க நன்றி.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி